பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி அண்ணாமலை பேச்சு!
தஞ்சாவூர் : பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காக எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமத்தின் முதல் நாள் பயணமான இன்று மாணவர்கள், பல்வேறு துறையினர் அடங்கிய குழு தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்குப் புறப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காசி தமிழ் சங்கமம் நிகழ்விற்காக செல்லும் குழுவினரோடு ரயிலில் கலந்துரையாடினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, காசி தமிழ் சங்கமம் நிகழ்வே பிரதமர் மோடியின் உணர்வு தமிழகத்தின் மீது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் - 2022 நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்குகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பாஜக அரசின் நோக்கத்தின் அடிப்படையில், காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அறிஞர்கள் இடையே கல்வி சார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து குழுக்களாக மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், கல்வி, கலாச்சாரம், வர்த்தகம், தொழில் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் பங்கேற்கின்றனர். முதல் குழு இன்று ரயில் மூலம் வாரணாசி புறப்பட்டுச் செல்கிறது. 216 பேர் அடங்கியுள்ள இந்த குழுவில் 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

ரயிலில் அண்ணாமலை
ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி செல்லும் காசி தமிழ்ச் சங்கமம் ரயிலை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார். பின்னர் அந்த ரயிலில் வந்த மாணவர்ள் உள்ளிட்ட 35 பேர் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபடியே சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

முதல் சிறப்பு ரயில்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "காசியில் ஒரு மாத காலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு நேற்று முதல் சிறப்பு ரயில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரயிலானது ராமேஸ்வரத்திலிருந்து தமிழக மாணவர்கள் 216 பேருடன் வாரணாசிக்கு செல்கிறது. சென்னையில் இருந்து வாரணாசிக்கு ரயிலை வழி அனுப்புவதற்கு சென்னை ஐ.ஐ.டி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மிகப்பெரிய வாய்ப்பு
இது முழுவதும் அரசு நிகழ்ச்சி. எனவே, காசி தமிழ்ச் சங்கமம் பயணத்தை பொதுமக்கள் இணைந்து ஒரு வெற்றிப் பயணமாக மாற்றுவது நமது கடமை. தொடர்ந்து இன்னும் 11 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 19ஆம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தமிழக மாணவர்களைச் சந்தித்து பேசுகிறார். இது தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழகத்திற்காகவே மோடி இதயம் துடிக்கிறது
இதில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் உணர்வு தமிழகத்தின் மீது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது. அவரின் இதயம் தமிழகத்திற்காக எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது. இதில் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications