கருணாநிதியின் தஞ்சை தளபதி.. முன்னாள் அமைச்சர் மறைவால் திமுகவினர் “ஷாக் - யார் இந்த உபயதுல்லா?
திமுக மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு முன்னாள் அமைச்சருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா இன்று தஞ்சாவூரில் காலமான நிலையில் அவரது அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்.
தஞ்சாவூர்: திமுக மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு முன்னாள் அமைச்சருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா இன்று காலை தஞ்சாவூரில் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். திமுகவின் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கும் அவரது மறைவு அக்கட்சியினரை சோகமடைய செய்து உள்ளது. யார் இந்த உபயதுல்லா, அவரது அரசியல் பயணம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் அவருக்கும் உள்ள நெருக்கம் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், 4 முறை திமுக எம்.எல்.ஏவுமாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்தவ எஸ்.என்.எம். உபயதுல்லா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார்.
83 வயதாகும் உபயதுல்லா தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

யார் இந்த உபயதுல்லா?
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தில் கடந்த 1941 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி பிறந்த முன்னாள் அமைச்சர் எஸ்என்எம் உபயதுல்லா திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். இதன் காரணமாக திமுகவில் ஆரம்பக்கட்டத்திலேயே இணைந்த அவர் கட்சியின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தார்.

கருணாநிதியின் நம்பிக்கை
பல ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்த அவரின் செயல்பாடுகள் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியை வெகுவாக ஈர்த்தது. இதனால் உபயதுல்லாவுக்கு தேர்தலில் போட்டியிட தொடர் வாய்ப்புகளை வழங்கினார் கருணாநிதி.

தொடர் வெற்றி
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய உபயதுல்லா, கடந்த 1989 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு சென்றார். அதேபோல் 1996 ஆம் ஆண்டு தேர்தல், 2001 தேர்தல், 2006 தேர்தலில் தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளை பெற்றார் உபயதுல்லா.

வணிக அமைச்சர்
கருணாநிதியின் தஞ்சை தளபதி என்று மாவட்ட நிர்வாகிகளால் அழைக்கப்பட்டு வந்த உபயதுல்லாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக்கொண்டே இருந்தார் அவர். குறிப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக வெற்றிபெற்ற பிறகு உபயதுல்லாவை தமிழ்நாடு அரசின் வணிக அமைச்சராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி.

திமுக மூத்த நிர்வாகி
திராவிட கொள்கையின் மீது பிடிப்பு கொண்ட அவர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுகவின் முகமாக இருந்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவர் ஒதுங்கியே இருந்து வந்தார். திமுக வர்த்த அணி தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த அவருக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

காலமானார்
இதனை தொடர்ந்து குடும்பத்தினரை அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவரது உயிர் பிரிந்தது. உபயதுல்லாவின் மறைவு திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு திமுகவினர், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications