ரொம்ப தப்பு.. தஞ்சாவூர் தேர் விபத்தை மகாமக சம்பவத்தோடு ஒப்பிடாதீங்க.. டிடிவி தினகரன் காட்டம்
தஞ்சாவூர்: ‛‛தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவத்தை மகாமக விபத்தோடு ஒப்பீட்டு பேசுவது என்பது தவறாக முடியும்'' என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்ெசெயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் அப்பர்சாமி மடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை சதயவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழா நடந்தது.
தேர் திருவிழாவின்போது அதிகாலையில் எதிர்பாராதவிதமாக தேரின் உச்சிப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி உரசியது. இதில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தனர். 10க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிடிவி ஆறுதல்
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். பிற கட்சியினர், சசிகலாவும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தனியார் கோயில் என கூறக்கூடாது
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛தமிழக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசக்கூடாது. விபத்து நடந்து விட்டது. அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூற வேண்டுமே தவிர இது தனியார் கோயில் என்று கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தான் இந்த கோயில் உள்ளது.

தவறாக முடியும்
சிலோனில் இல்லை. அரசாங்கம் பொறுப்பேற்று அந்த அந்த விபத்திற்கான காரணத்தைச் சரி செய்யவேண்டும். இது போல் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தினை மகாமக விபத்தோடு ஒப்பிட்டு பேசி, அரசியல் ஆக்கினால் தவறாக முடியும்'' என்றார்.

விமர்சனம் ஏன்
அதாவது முன்னதாக இந்த சம்பவம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை பேசினார். கடந்த 1992ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் நிகழ்ந்த விபத்து குறித்து பேசினார். அப்போது அவர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை தான் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications