மாணவி தற்கொலையில் மதம் தொடர்பான பிரச்சார புகார்கள் எதுவுமில்லை - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
மத ரீதியான பிரச்சாரங்கள் பள்ளி தலைமை ஆசிரியராலோ, மற்ற ஆசிரியராலோ செய்யப்படவில்லை என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தஞ்சாவூர்: மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார். மத ரீதியான பிரச்சாரங்கள் பள்ளி தலைமை ஆசிரியராலோ, மற்ற ஆசிரியராலோ செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில். விடுதியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், மாணவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.
இருப்பினும், மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு பள்ளியில் பார்வையிட்டனர். விடுமுறையின் போது மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்ற போது சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே தங்கி இருந்தார்.
ஜனவரி 10 ஆம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர். மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை.
பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகாரகள் எதுவும் பெறப்படவில்லை. முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்விஅலுவலகத்திற்கு மதம் சார்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications