பொன்னியின் செல்வன்..ராஜ ராஜசோழன் 1037 வது சதய விழா.. தஞ்சையில் நவ.3ல் விடுமுறை
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரும் 3.11.22 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை அடைந்து, பெரிய கோவிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜ சோழன்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் என்று போற்றப்படுபவர் ராஜ ராஜ சோழன். இவர் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலயம் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் கட்டுமானம் குறித்து உலக கட்டிக்கலை வல்லுநர்கள் இப்போதும் வியந்து பேசுகின்றனர். ராஜராஜ சோழன், கட்டடக்கலை, நீர் மேலாண்மை உள்ளிட்டைவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த ஆட்சியினை வெளிப்படுத்தியவர்.

தமிழர்களின் பெருமை
அந்தக் காலத்திலேயே நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து மழை நீர் சேமிப்பு முறையைக் கையாண்டவர். தனித்திறனுடன் புரிந்த ஆட்சியின் மூலம் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர். பொன்னியின் செல்வன் என்று போற்றக்கூடிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்.

ஐப்பசி சதய விழா
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்திர தினம் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக விழா நடை பெறும். சதயவிழா தினத்தில் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை விடப்படும். பெரிய கோயில் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும்.

1037வது சதய விழா
ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 1037ஆவது சதய விழா பந்தக்கால் நடுவதுடன் தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 02,03 இரண்டு நாட்கள் அரசு விழவாக கொண்டாடப்படவுள்ளது.

நவ.03ல் உள்ளூர் விடுமுறை
மங்கல இசையுடன் தொடங்கும் இவ்விழா ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் தேவாரப் பாடல்கள் பாடி பூஜைகள் செய்யப்படும். திருமுறை வீதியுலா, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், சிறப்பு சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் ராஜராஜசோழனின் 1037ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications