மனைவி வீட்டில் இல்லை.. மாணவியை அழைத்ததாக சாஸ்த்ரா பல்கலை. ஊழியர் மீது முன்னாள் மாணவி பாலியல் புகார்
தஞ்சாவூர்: சாஸ்த்ரா பல்கலைக்கழக ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து டிவிட்டரில் முன்னாள் கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து மேலும் சில கல்வி நிறுவனங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில், தஞ்சாவூர் வல்லம் பகுதியில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர் மீது அவர்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் சிலர் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர்.
பாலியல் தொந்தரவு செய்த நபர்களின் பெயர்களையும், எந்த வகையில் பாலியல் தொந்தரவு செய்தனர் என்பதையும் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்
இது சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது. பல்கலைக்கழக பேராசிரியர் வரதராஜன் என்பவர் தன்னிடம் 'முறைகேடாக' நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "எனக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்பது அவருக்கு (பேராசிரியர் வரதராஜனுக்கு) தெரியும்.
மிரட்டல்
இந்த விஷயத்தை எனது பெற்றோரிடம் கூறிவிடுவதாக சொல்லி என்னை மிரட்டினார். மேலும், அடிக்கடி எனக்கு ஃபோன் போட்டு ஸ்டாஃப் ரூமுக்கு வரவழைத்தார். நான் 3வது ஆண்டு படித்தபோது, புதிதாக வேலைக்கு சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்த ஊழியர் என்னை தேர்வுக்கூடத்தில் காக்க வைத்து, ஏனைய மற்ற மாணவ, மாணவியர் அனைவரும் சென்ற பின்னர் என்னிடம் 'சில்மிஷம்' செய்தார்.
தோழியிடம்
எனது கேள்வி தாளில் அவரது மொபைல் எண்ணை எழுதினார். இந்த ஆதாரத்தை எடுத்துக்கொண்டு, நானும் எனது தோழியும், டீனிடம் புகார் செய்தோம். அதற்கு அவர் 'நாம் சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். நாம் அவரை தண்டிக்கக் கூடாது' என கூறிவிட்டார் என பதிவிட்டுள்ளார் அம் மாணவி.
பல்கலைக்கழகம்
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இப்பல்கலைக் கழகத்தில் படித்த மாணவி ஒருவர், இப்பல்கலைக்கழக ஊழியர் நடராஜன் என்பவர் ஒருநாள் இரவு 10 மணியளவில் திருச்சி ஏர்ப்போர்ட்டிலிருந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு தன்னை காரில் அழைத்து வரும்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
வீட்டில் தனியாக
அவரது மனைவி வெளியூர் சென்றிருப்பதாகவும், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் கூறி தன்னை அவரது வீட்டில் அன்றிரவு தங்குமாறு வற்புறுத்தியதாகவும் அப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தன்னை 'தொடக்கூடாது' என அவரை எச்சரித்ததோடு, அதன் பின்னர் பயந்துபோய் தனது பெற்றோருக்கு ஃபோன் போட்டதாகவும், ஆனால் தனது பெற்றோர் அச்சமயத்தில் ஃபோன் அழைப்பை பிக்அப் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
மனதளவில்
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வந்தடைந்ததும் காரிலிருந்து 'தப்பித்தேன்...பிழைத்தேன்'என உள்ளே ஓடிச் சென்றுவிட்டதாகவும் நடந்த சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய அழுதுகொண்டே இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
புகார்
இதுபற்றி வைத்யா மற்றும் மாணவிகளின் காப்பாளர் சாந்தி ஆகியோரிடம் புகார் செய்ததாகவும், ஆனால் அவர்கள் இருவரும் 'இரவு 10 மணிக்கு மேல் வந்தது உன்னுடைய தவறு. அவர் உன்னுடைய உறவினர். எனவே உனது பெற்றோரிடம் கூறி இப்பிரச்சினையை டீல் பண்ணிக்க. பல்கலைக்கழகத்தில் புகார் செய்யாதே' எனக் கூறிவிட்டதாகவும் அம் மாணவி பதிவிட்டுள்ளார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்ட போது அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை.