“ஸ்மார்டாகும்” நம்ம தஞ்சாவூர்.. வந்தாச்சு “ஸ்கேட்டிங்” தளம்! திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம், 2 கைப்பந்து தளங்கள், 1.1 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நடைப்பயிற்சி பாதை, நுழைவாயில் வளைவு போன்றவை கட்டி முடிக்கப்பட்டன.
தஞ்சாவூர்: விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தஞ்சாவூருக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் அரங்கத்தை திறந்து வைத்து இருக்கிறார். இதன் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாட்ட ஆர்வமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைகள் பூங்கா தொடங்கி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தஞ்சாவூரில் பல்வேறு விளையாட்டுகளில் வீரர்களை உருவாக்கும் வகையில் அங்கு உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு விளையாட்டு தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

ஸ்மார்டாகும் தஞ்சாவூர்
அந்த வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம், 2 கைப்பந்து தளங்கள், 1.1 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நடைப்பயிற்சி பாதை, நுழைவாயில் வளைவு போன்றவை கட்டி முடிக்கப்பட்டன. அழகிய வடிமைப்புடன் அமைக்கப்பட்ட இந்த அரங்குகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

ஸ்கேட்டிங் அரங்கம்
தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இன்று முதல்முறையாக தஞ்சாவூர் வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் இந்த விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்தார். இதன் மூலம் தஞ்சாவூரிலும் ஏராளமான ஸ்கேட்டிங் வீரர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

உபயதுல்லா படம் திறப்பு
முன்னதாக தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு சென்ற அவர் மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் உருவ படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார் ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

அனிதா அரங்கம்
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டார்கள். முன்னதாக அரியலூர் சென்ற அவர், அரியலூர் மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டுள்ள நீட்டால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவி அனிதாவின் பெயர் கூட்டப்பட்ட அரங்கத்தை திறந்து வைத்தார்.

அரியலூர் பயணம்
அத்துடன் அரசியலூரில் அரசு பள்ளிகளில் பயின்று 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணம், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் என அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அரியலூர் மருத்துவ கல்லூரியில் அவர் வழங்கினார்.

பெரம்பலூர் பயணம்
அடுத்ததாக பெரம்பலூர் மாவட்டம் சென்ற அவர், குன்னத்தில் அமைச்சர் சிவசங்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார். அதேபோல், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள போட்டி தேர்வு நூலகம் மற்றும் படிப்பகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications