தேனியில் முருகேஸ்வரி வீட்டில் அதிசயம்: பேரன் பேத்தி எடுத்த 58 வயது தாத்தாவுக்கு நெகிழ்ச்சி சர்ப்ரைஸ்
தேனி: தேனியில நடந்த ஒரு சுபநிகழ்ச்சி இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. மேலும் பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. அப்படி என்ன நடந்தது தேனி முருகேஸ்வரி வீட்டில்?
தென் மாவட்டங்களை பொறுத்தவரை காது குத்து விழா என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது ஒரு குடும்பத் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது..

குலதெய்வ கோயிலுக்கு அழைத்து சென்று மொட்டை போட்டு, குளிப்பாட்டி, தாய்மாமன் கொண்டு வரும் புத்தாடைகளை அணிவித்து மகிழ்வார்கள்.. குழந்தையை தாய்மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்துவதும், உடனே தங்க காதணிகளை அணிவிப்பதும் வழக்கம்..
காது குத்து நெகிழ்ச்சி சம்பவம்
இதற்காக ஏராளமான சீர்வரிசைகளை தங்கள் மருமகன்களுக்கும் மருமகள்களுக்கும் தாய்மாமன்கள் செய்வார்கள்.. ஒருவேளை தாய்மாமன் இல்லாவிட்டால், அதற்கு நிகரான ஒரு உறவை வைத்து இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்..
சமீபத்தில் கூட வேலூரில் ஒரு காது குத்தும் விழா சுவாரஸ்யமாக நடந்தது.. இதில் விசேஷம் என்னவென்றால், காது குத்திக்கொண்டவர்கள் குழந்தைகள் இல்லை.. சொல்லப்போனால் அவர்கள் பேரப்பிள்ளைகளையே எடுத்தவர்கள்.. அவர்கள் 2 பேருக்குமே 85 வயசாகிறது.. ஆனால் அவர்களுக்கு சின்ன வயசில் காது குத்தவில்லையாம்.. அதனால் தற்போது தங்களின் தாய்மாமன் முன்னிலையில் காது குத்தப்பட்டது..
அதுபோலவே இப்போது மீண்டும் ஒரு காதணி விழா இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.. பொதுவாக குழந்தை பிறந்த சில மாதங்களில் அல்லது ஒரு வருடம் கழித்து மொட்டை அடித்து காது குத்துவது இந்து மத பாரம்பரிய முறையாக இருந்து வருகிறது.. தவிர்க்க முடியாத சில காரணங்களால் காதணி விழா ஒரு சில ஆண்டுகள் வரை தள்ளிப்போவதும் சகஜம்தான்..
தேனி முருகேஸ்வரி சர்ப்ரைஸ்
ஆனால், மிகவும் காலம் தாழ்த்தி 58 வயதில் ஒருவருக்கு காதணி விழா, அதுவும் தடபுடலாக வாணவேடிக்கைகளுடன் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.. தேனியில் பேரன் பேத்தி எடுத்த 58 வயதாகும் தனது கணவருக்கு, மனைவி ஒருவர் காதணி விழா நடத்தியிருப்பதுதான் இப்போது தேனி மாவட்டத்தின் பேசுபொருளாக இருக்கிறது..
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மேலமந்தை தெருவை சேர்ந்தவர் தங்கையா.. இவருக்கு வயது 58.. இவருக்கு திருமணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும், சுகந்தி என்ற மகளும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.. இதில் சுகந்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்..
மனைவி தந்த மறக்க முடியாத பரிசு
இந்த நிலையில் முருகேஸ்வரி பல வருடங்களாக தனது கணவரான தங்கையாவிற்கு தகுந்த முறையில் காதணி விழா நடத்த வேண்டும் என ஆசைப்பட்டு வந்தார்.. தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக தேவதானப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலான கண்ணாத்தாள் கோயிலில் தங்கையாவிற்கு மொட்டை அடித்து காது குத்து விழாவை விமரிசையாக நடத்தினார்..
தங்கையாவின் தாய்மாமன் முறையுள்ள உறவினர்கள் தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகளை வெடித்து, சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.. இந்த விழாவில் தங்கையாவின் உறவினர்கள், அவரின் பேரன் மற்றும் பேத்திகள், ஊர்மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்..
நெகிழ்ச்சி - மகிழ்ச்சியில் தாத்தா
வந்திருந்த எல்லாருக்கும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.. பேரன் பேத்திகளுக்கு காதணி விழா நடத்த வேண்டிய வயதில் கணவருக்கு விழா நடத்தியது குறித்து அவரது மனைவி முருகேஸ்வரி நெகிழ்ச்சியுடன் பேசினார்..
என்னுடைய கணவர் சின்ன வயதாக இருக்கும்போதே அவரது அம்மா இறந்துவிட்டார்.. அதனால் அவருக்கு சின்ன வயசில் காது குத்தப்படவில்லை.. அந்த குறை என்மனசில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.. இதற்காக பலமுறை முயற்சித்தும் சரியான நேரம் அமையவில்லை..
ஒரு வழியாக மகாசிவராத்திரி அன்று குலதெய்வ கோயிலில் வைத்து என்னுடைய கணவருக்கு மொட்டை அடித்து காதணி விழாவை நடத்தி முடித்துவிட்டேன்.. இப்போதுதான் தனது மனதிற்கு நிறைவாக இருக்கு" என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.. !!












Click it and Unblock the Notifications