தட்கல் விவசாய மின் இணைப்பு! பல லட்சம் கட்டி 6 மாதமாக விவசாயிகள் வெயிட்டிங்! மின்வாரியம் சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட தட்கல் விவசாய மின் இணைப்பு 2026 திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியும், கடந்த 6 மாதங்களாக மின் இணைப்பு கிடைக்காமல் தமிழக விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக திருச்சி விவசாய மின் இணைப்பு பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்த அடுக்கடுக்கான புகார்களுக்கு மின்சார வாரியம் தற்போது கொடுத்துள்ள விளக்கம் என்ன என்பதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான விரைவு தட்கல் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 10,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2025 டிசம்பர் 15 அன்று வெளியானது.

tatkal power connection delay farmers electricity issue TNEB Tamil Nadu farmers electricity connection scheme

தமிழ்நாடு மின்சார வாரியம்

முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மின்சாரம் பெறலாம் என்ற நம்பிக்கையில், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விவசாயிகள், தங்களின் மோட்டார்களின் குதிரைத்திறன் (HP) அடிப்படையில் பெரும் தொகையை மின்வாரியத்தில் செலுத்தினார்கள்..

திருச்சி விவசாயிகள்

அதன்படி 5 குதிரைத்திறன் வரை உள்ள மோட்டார்களுக்கு 2.50 லட்சம் ரூபாயும், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை 2.75 லட்சம் ரூபாயும், 7.5 முதல் 10 குதிரைத்திறன் வரை 3 லட்சம் ரூபாயும், 10 முதல் 15 குதிரைத்திறன் கொண்ட பெரிய மோட்டார்களுக்கு அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரையிலும் விவசாயிகள் ஒருசேர முழுப் பணத்தையும் மின்வாரிய அலுவலகங்களில் கட்டி உள்ளனர்.

விவசாயிகள் உடனடியாக மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியும், தங்களின் நகைகளை அடகு வைத்தும் இந்த தொகையை திரட்டி அரசுக்கு செலுத்தி உள்ளார்கள்.. ஆனாலும் பணம் செலுத்தி 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பல விவசாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் திருச்சி மாவட்ட விவசாயிகள் இந்த தாமதத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாமல் அடிக்கடி பாசனத்திற்குத் தடை ஏற்படுவதால், இந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பம்புசெட் மூலம் விவசாயம் செய்யத் திட்டமிட்டனர்.

பல லட்சம் கட்டியும் மின் இணைப்பு இல்லை

இதற்காக பல லட்ச ரூபாய் கூடுதலாகச் செலவு செய்து தங்களின் விளைநிலங்களில் போர்வெல் அமைத்திருக்கிறார்கள்.. தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு உடனே கிடைக்கும் என்று வட்டிக்குக் கடன் வாங்கி அரசுக்குக் கட்டிய பணமும் முடங்கி, தங்களது பயிர்களும் கருகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் கண்ணீருடன் சொல்கிறார்கள்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, தட்கல் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 367 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் இதுவரை 83 விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 284 விவசாயிகளுக்கும் மின் கம்பங்கள் அமைத்தல் மற்றும் தளவாடப் பொருட்கள் பற்றாக்குறை போன்ற பணிகளைச் சரிசெய்து, மிக விரைவில் மின் இணைப்பு வழங்க உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மின்சார வாரியம் பதில் என்ன

அதிகாரிகளின் நம்பிக்கை வரிகள் விவசாயிகளுக்கு ஆறுதலை தந்தாலும், தட்கல் என்ற பெயரே உடனடித் தேவைக்கானது என்றிருக்கும்போது, பல லட்சம் ரூபாயை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு 6 மாதங்களாக மின்சார வாரியம் காலம் கடத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டே போவதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவிதமான இழுபறியுமின்றி போர்க்கால அடிப்படையில் உடனடியாக மின் இணைப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாக உருவெடுத்துள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+