எடப்பாடிக்கு ஷாக்.. தட்டித் தூக்கிய ஓபிஎஸ்.. பண்ணை வீட்டில் திடீர் சந்திப்பு- உறுதி கொடுத்த ‘சேலம்’!
தேனி : எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 'ஷாக்' கொடுக்கும் வகையில், சேலம், நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்ட நிர்வாகிகள் பலரை தன் பக்கம் இழுத்த எடப்பாடி பழனிசாமி, தற்போது தனது சொந்த மாவட்டத்திலேயே கோட்டை விட்டுள்ளார்.
சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், கடந்த 4 நாட்களாக தனது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் தனது பண்ணை வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆதரவாளர்களிடம் கருத்துகளை ஓபிஎஸ் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓபிஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யாருக்கு பலம்?
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் கை கட்சியில் ஓங்கி இருக்கிறது. பெரும்பான்மையான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கே உள்ளது. இந்நிலையில், அவரது பலத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும், ஈபிஎஸ் ஆதரவாளர்களை தன் பக்கம் இழுப்பது, ஈபிஎஸ்ஸுக்கு எதிராக சசிகலாவின் ஆதரவை தன் பக்கம் திருப்புவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ்.

பண்ணை வீட்டில் ஆலோசனை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்த பிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊருக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், நான்கு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பகல் நேரங்களில் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் அவர் மாலை நேரங்களில் கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் செல்வதாகவும் அங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அவரைச் சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடிக்கு ஷாக்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆதரவை மட்டுமல்லாது, கொங்கு மண்டலம், வட மாவட்டங்களிலும் ஈபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவு
சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, சேலம் ரவி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளம் கைலாசபுரத்தில் உள்ள ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் சந்தித்து அவருக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், பலரையும் அழைத்து வருவதாகவும் ஓபிஎஸ்ஸிடம் உறுதியளித்துள்ளனர்.

சற்றும் எதிர்பார்க்கவில்லை
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளின் ஆதரவு அதிகரித்து வந்த நிலையில்தான் சற்றும் எதிர்பாராத விதமாக ஈபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொண்டர்களிடையே வேதனை
ஓபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக நிர்வாகிகள், "அ.தி.மு.க உருவான காலத்தில் இருந்து நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லும் தலைமையே கட்சியில் இருந்து வந்தது. ஆனால் அதுபோன்ற நிலை தற்போது இல்லை. உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி ஓரம்கட்ட நினைப்பது பெரும்பாலான அ.தி.மு.க தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது." எனத் தெரிவித்துள்ளனர்.

மரியாதை இல்லாத இடத்தில்
மேலும், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியம். தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவி கொடுத்துவிட்டு வேண்டாதவர்களை காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவிக்க உள்ளோம் எனக் கூறியுள்ளனர்.
Recommended Video

நாமக்கல் மாவட்டத்திலும்
இதேபோல் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கோட்டையான நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளதாக நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஓபிஎஸ்ஸை சந்திக்க வந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மரியாதை இல்லாத இடத்தில் இருப்பதை தவிர்த்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்த நிகழ்வு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications