ஓபிஎஸ் மகனை வட்டமிடும் சர்ச்சை! சொந்த ஊரிலேயே புரட்சிப் படையா? எல்லாத்துக்கும் ‘அவர்’ தான் காரணம்?
தேனி : தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் அரசியல் காரணங்களுக்காகவே இது போன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் உட்கட்சி மோதல் இருப்பதாக கூறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் ஓ.பி.எஸ் மகனான எம்.பி. ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் சோலார் மின்வெளியில் சிக்கி சிறுத்தை ஒன்று சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தது.
இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள், ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடுமையாக தாக்கி அவரை கைது செய்துள்ளனர்.
மாண்புமிகு அமைச்சர் ரவீந்திரநாத் குமார்! ஓபிஎஸ்க்கு எடப்பாடி கொடுத்த மெகா ஆஃபர்! ஆனால் ஒரு சிக்கல்?
ரவீந்திரநாத் எம்.பி.
மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தில் பணியாற்றும் மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரின் தோட்ட தொழிலாளர்களை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் போராட்டம்
இதை கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பவர்கள் சங்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்ய வேண்டும்
வனத் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அலெக்ஸ் பாண்டியன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ் மகன் எம்.பி. ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். பொய் வழக்கு போட்ட வனத்துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். இதனால் ஓபிஎஸ் மகனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
விளக்கம்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் மிக வலுவாக முன்வைக்கப்படும் நிலையில் இதற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று வேண்டுமென்றே சிலர் அவரை சர்ச்சைகளில் சிக்க வைக்க முயல்வதாக கூறுகின்றனர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர். மேலும் உட்கட்சி விவகாரங்களை மனதில் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் இதையெல்லாம் அவர் நிச்சயம் சமாளிப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.