ஓபிஎஸ் பக்கம் பாயும் பொதுக்குழு உறுப்பினர்கள்.. அப்போ ஈபிஎஸ் ஆதரவு.. இன்று தேனியில் - என்ன நடக்குது?
தேனி : கடந்த பொதுக்குழுவின்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்காலப் பொதுச் செயலாளராகி ஓ.பன்னீர்செல்வத்தை கட்டம் கட்டித் தூக்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வருகிறார் ஓபிஎஸ்.
மேலும், கட்சியில் தனது பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார் ஓபிஎஸ். கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்ற ஓபிஎஸ், தினமும், நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தினமும் சந்தித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி டீமுக்கு ஸ்டாலினோடு நெருக்கம்.. சும்மாவா நடக்குது இது- வெடி வீசிய ஓபிஎஸ் ஆதரவாளர்!" /> எடப்பாடி பழனிசாமி டீமுக்கு ஸ்டாலினோடு நெருக்கம்.. சும்மாவா நடக்குது இது- வெடி வீசிய ஓபிஎஸ் ஆதரவாளர்!
ஓபிஎஸ் தீவிரம்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கி வந்த நிலையில், சமீப சில நாட்களாக, ஓபிஎஸ் தரப்பின் நடவடிக்கைகள் தீவிரமடையத் தொடங்கி உள்ளன. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தங்களுக்குச் சாதகமான முடிவு வரும் என ஓபிஎஸ் தரப்பு உறுதியாக இருந்து வருகிறது. அப்படி நடந்தால் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாததாகிவிடும். தானாகவே ஓபிஎஸ்ஸின் கை ஓங்கி விடும். இதற்காக பொதுக்குழு வழக்கில் வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார் ஓபிஎஸ்.
வீட்டில் ஆலோசனை
இதற்கிடையே கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிலும், மாலை நேரங்களில் கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டிலும், தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார் ஓபிஎஸ். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அவரைச் சந்தித்து பேசி வருகின்றனர். அவர்களிடம் அவரவர் பகுதியில் இருக்கும் நிலைமையைக் கேட்டறிந்து வருகிறார் ஓபிஎஸ்.
ஷாக் ஆன ஈபிஎஸ்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் மட்டுமல்லாது, கொங்கு மண்டலம், வட மாவட்டங்களிலும் ஈபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சமீபத்தில் சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் பலரையும் அழைத்து வருவதாகவும் ஓபிஎஸ்ஸிடம் உறுதியளித்துள்ளனர். இது ஈபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆதரவாளர்களுடன் மீட்டிங்
இந்நிலையில், திருநெல்வேலி, தென்காசி, திருவாரூர் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோருடன் திடீர் ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் ஓபிஎஸ்ஸை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஈபிஎஸ் ஆதரவாளர்களாக மாறியிருந்த நிலையில், மீண்டும் ஓபிஎஸ் பக்கம் பலரும் பாய்ந்து வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஓபிஎஸ் பக்கம் பாயும் பொதுக்குழு உறுப்பினர்கள்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தான் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 2,400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். அந்தப் பொதுக்குழுவின்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நெல்லை, தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் இப்போது ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துள்ளனர்.
போட்டி பொதுக்குழு
ஓபிஎஸ் தான் புதிதாக நியமித்த கட்சி நிர்வாகிகள் மற்றும், தன் பக்க வந்த பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய ஆலோசனையில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளார். குறிப்பாக, போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்து ஓபிஎஸ் கருத்துகளைக் கேட்டுள்ளார். போட்டி பொதுக்குழுவை நடத்துவதற்குத் தோதாக, ஈபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் பக்கம் வந்துள்ளதால் ஓபிஎஸ் உற்சாகமாகியுள்ளார். மேலும், தங்கள் ஆதரவாளர்களை வளைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் டீம் ஈடுபட்டுள்ளதால் ஈபிஎஸ் அணி கையைப் பிசைகிறதாம்.
சவால்
ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். தன்னிடம் கட்சியும், இரட்டை இலை சின்னமும் இருப்பதாக சொல்லி மக்களையும், தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி குழப்பி வருகிறார். தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஓருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தால் நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு திராணி இருந்தால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா என்று சவால் விட்டுள்ளனர்.
பொதுக்குழுவை நம்பி
பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு நம் பக்கம் உறுதியாக இருக்கிறது என்ற அடிப்படையில்தான் இத்தனை முயற்சிகளிலும் துணிந்து இறங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதற்கேற்றார்போல, நாள்தோறும் ஈபிஎஸ்ஸுக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்தே வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தங்கள் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ் பக்கம் பாய்ந்து வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.