ஸ்டாலின் என்றாலே உழைப்பு என்று சொன்னவர் கருணாநிதி...அதை கற்றுக்கொடுத்தவர் அப்பா - முதல்வர் பெருமிதம்
ஸ்டாலின் என்றாலே உழைப்பு... உழைப்பு... உழைப்பு என்று சொன்னவர் கருணாநிதி என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேனி: ஸ்டாலின் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்று கருணாநிதியிடம் செய்தியாளர் கேட்டதற்கு ஸ்டாலின் என்றாலே உழைப்பு... உழைப்பு... உழைப்பு என்று சொன்னவர். அந்த உழைப்பைக் கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
Recommended Video
ரூ.114.21 கோடியில் புதிய 40 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஊஞ்சம்பட்டில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினர்.
தேனி மாவட்ட மக்களின் கனவு திட்டமான 18-ம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கலைஞர் ஆட்சியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டது. சோத்துப்பாறை அணையால் 32 கிராமங்கள் பயன்பெறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட பணிகள்
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையவில்லை... ஆனால் பத்தாண்டுகள் செய்ய வேண்டிய மக்கள் நலப்பணிகளை செய்துள்ளோம். மகளிர் சுய உதவிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டார். ஐ. பெரிய சாமி தேனியைப் போல சுறுசுறுப்பாக செயல்படுபவர் என்று கூறினார்.

திராவிட மாடல் என்றால் என்ன?
வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் என்று கூறிய ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தார். அது என்னுடைய மாடல்... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாடல்தான் திராவிட மாடல் என்று சொன்னார். அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சேரும் வகையில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்றார்.

தனிமனித தேவை
ஒவ்வொரு தனிமனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் இலக்கு என்றும் கூறினார். அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் திராவிட மாடல் என்று சொன்னார் ஸ்டாலின். கொரோனா கொடிய நோய்க்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம் என்றார்.

உழைப்பு என்றால் ஸ்டாலின்
தனது தந்தையைப் பற்றி நினைவு கூர்ந்தார் ஸ்டாலின்.ஒரு முறை செய்தியாளர் சந்திப்பின் போது கருணாநிதியிடம் உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு ஸ்டாலின் என்றாலே உழைப்பு... உழைப்பு... உழைப்பு என்று சொன்னார். அந்த உழைப்பை கற்றுக்கொடுத்தவரே அவர்தான். உழைக்க ஊக்கம கொடுத்தவரே அவர்தான். எனக்கு மட்டுமல்ல லட்சக்கணக்கான மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுத்தவர் அவர்.

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழா
அவரது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று நான் சட்டசபையில் அறிவித்த போது அதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு கொடுத்தனர். தந்தையின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதைப் பற்றி அறிவிப்பதில் அவரது மகனாக நான் பெறுமைப்படுகிறேன் அதற்கு மகிழ்ச்சியடைகிறேன். எனது அறிவிப்பை அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர். அதை யார் ஆதரிக்கவில்லை என்று கூறி இந்த மேடையை அரசியலாக்கவிரும்பவில்லை என்று சொன்னார்.












Click it and Unblock the Notifications