இளங்கோவனுக்காக வரும் ராகுல்.. ஓபிஎஸ் மகனுக்காக ஓடி வரும் மோடி.. 12, 13.. பரபரக்கும் தேனி
Recommended Video

தேனி: எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தியும், ஆளும் கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும், அடுத்தடுத்த நாளில் கேரள எல்லையை ஒட்டிய சின்னஞ் சிறு நகரான தேனிக்கு வருகிறார்கள். இதனால் தேனி நகரமே களைகட்டியுள்ளது.
பொதுவாக பிரதமர் மோடி, அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ மதுரை, கோவை, சென்னை, திருச்சி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்து செல்வார்கள்.
இதில் கன்னியாக்குமரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு தேசிய கட்சிகளுக்கு அதிகம் என்பதால் அங்கு மட்டும் இரண்டு கட்சி தலைவர்களும் அடிக்கடி வருவார்கள்.

ராகுல் வருகை
இந்நிலையில் கேரள எல்லையை ஒட்டி உள்ள சின்னஞ்சிறு தொகுதியான தேனிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதியும், பிரதமர் மோடி 13ம் தேதியும் வர உள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் வர உள்ளதால் தேனி நகரம் களை கட்டியுள்ளது. இவர்கள் தேனி வருவதற்கு என்ன காரணம் என்பதையும், அதற்கான சூழல் வந்தது ஏன் என்பது பற்றியும் இப்போது பார்த்துவிடுவோம்.

தேனி மக்களவை தொகுதி
தேனி மக்களவை தொகுதியில் பெரியகுளம்(தனி), ஆண்டிபட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய இரண்டு தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பாஜகவிற்கு கஷ்டம்.. காங்கிரஸ் நிலை என்ன தெரியுமா?.. அசத்தல் சர்வே இதோ!

ஒபிஎஸ் ஊர்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தான் தேனி. இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரைச் சேர்ந்தவர் என்பது ஊருக்கே தெரியும். இப்போது விஷயத்துக்கு வரும். மோடி,ராகுல் தேனி வருவதற்கு ஒ.பன்னீர்செல்வம் மகன் இங்கு போட்டியிடுவது முக்கிய காரணம்.

ஓபிஸ்க்கு கைமாறு
அதிமுகவுக்கு பாரதிய ஜனதாவுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியவர் என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தான். வலிமையான கூட்டணியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று விரும்பிய மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் பேருதவியாக இருந்தது அனைவருக்கும் தெரியும். எனவே அவரது மகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். வரும் ஏப்ரல் 13ம் தேதி பிரதமர் மோடி தேனியில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வருகை
இந்த தகவலை அறிந்த தேனி காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தன் பங்குக்கு அவர்களின் தலைவரான ராகுல் காந்தியை கூப்பிட்டுள்ளார். மோடி வந்து பிரச்சாரம் செய்ய உள்ளதை கேள்விப்பட்ட ராகுல் காந்தி, தேனி வந்து பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அதுவும் மோடி 13ம் தேதி வருவதாக அறிவித்துள்ள நிலையில், 12ம் தேதியே தேனிக்கு வந்து பிரச்சாரத்தில் பேசுவதாக ராகுல் அறிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர்
இதற்கிடையே தேனியில் தனது செல்வாக்கை செலுத்தி எப்படியும் வென்றுவிட வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளார். அவர் இன்று தேனி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளரான தங்கத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் தேனி வர உள்ளனர்.

தேனி சுறுசுறுப்பு
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களும் அடுத்தடுத்த நாட்களில் வர உள்ளதால், தேனி நகரமே உற்சாகமாக காணப்படுகிறது. அதிமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுல் மற்றும் மோடி பேசப்போகும் இடம் மற்றும் அனுமதிக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications