கண்ணகி கோயில் சாலை! 10 ஆண்டுகள் கண்டுக்கல ஓபிஎஸ்! 18 மாதங்களில் பச்சைக் கொடி காட்டிய ஸ்டாலின்!
தேனி: தமிழகம் கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி தேவி கோயிலுக்கு சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல் மங்கலதேவி மலையில் உள்ள கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கண்ணகி கோயிலுக்கு சாலை அமைப்பது தொடர்பாக தேனி மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக பல முறை ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தும் வேலைக்கு ஆகவில்லை.
இந்நிலையில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 18 மாதங்களில் ஆய்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தலைமை காதை எட்டிய திமுக தொண்டர்கள் குமுறல்.. டக்கென பறந்த ஆர்டர்! அவங்கதான் ஃபர்ஸ்ட்! கண்டிப்பு!
கண்ணகி கோயில்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கே உள்ள மங்கலதேவி மலையில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஆரம்பத்தில் ஒரு வாரம் நடைபெற்ற சித்திரை முழு நிலவு திருவிழாவானது கேரள அரசு அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் காட்டும் கெடுபிடிகளால் ஒரு நாள் விழாவாக மாறிப்போனது. கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால் இத்தகைய கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன.
வேலை நடக்கவில்லை
இதனிடையே கண்ணகி கோயிலை சீரமைக்க வேண்டும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேனி மாவட்ட மக்களும், பக்த்ர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர், துணை முதல்வர், என பவர்ஃபுல் மனிதராக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இது தொடர்பாக பலமுறை கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
பாதை அமைக்க ஆய்வு
இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொள்வதற்காக தேனி சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் முயற்சியாக முதற்கட்டமாக கண்ணகி கோயில் உட்பட 5 மலைக்கோயில்களுக்கு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கண்ணகி கோயிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விடிவு காலம்
பல ஆண்டுகளாக பக்தர்கள் வைத்த கோரிக்கைக்கு விடிவு காலம் தந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனிடையே கண்ணகி கோயில் கேரளாவுக்கு சொந்தமானது அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் மங்கல மேடு கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள் இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.