காதல் மனைவி பிரிப்பு.. விஷம் குடித்த இளைஞர்.. சிகிச்சையின் போது நடந்த பயங்கரம்.. தேனி ஷாக்!
தேனி: காதல் மனைவியை பிரிந்ததால் மனம் உடைந்து விஷம் குடித்த இளைஞரை, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து, பெண்ணின் சகோதரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி என்பவரின் மகன் வேல்முருகன் (25). இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில்வேலை பார்த்து வருகிறார்.
வேல்முருகன் தனது உறவினரான நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர். என். வரதராஜன் என்பவரின் மகள் ரஞ்சினி (20) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
காதல் திருமணம்
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கரூரில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் தம்பதிகள் ஊருக்கு வந்தபோது ரஞ்சனியை மட்டும் அவரது பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் அவர் திரும்ப வரவில்லை.
சிகிச்சை
இதையடுத்து காதலியை பிரித்து விட்டதாக மனம் உடைந்த வேல்முருகன் நாச்சியார்புரம் அருகே உள்ள கண்மாயில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தப்பிய இளைஞர்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகனை காதலித்த பெண்ணின் உடன் பிறந்த சகோதரர் விஜய் என்பவர் பார்க்க வந்தனார். திடீரென வேல்முருகனை மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
விசாரணை
இதையடுத்து படுகாயமடைந்த வேல்முருகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கானாவிளக்கு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.