70 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் ...உபரிநீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை!
தேனி : வைகை அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதையடுத்து, 7 மதகுகளின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீர், தேனி திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது.
நிரம்பி வழியும் வைகை அணை..7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணை
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால், அணையில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி வரை நீர் திறக்கப்பட்டது
நிரம்பி வழியும் வைகை அணை
வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மூல வைகை, வருஷநாடு வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை ஆற்றிலும், குரங்கணி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் கொட்டக்குடி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. முல்லைப் பெரியாறு, வைகை ஆறு மற்றும் கொட்டக்குடி ஆறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்தும் அதிகப்படியான நீர் வரத்தால், வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 30-ஆம் தேதி 66 அடியை எட்டியதையடுத்து, ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
70 அடியை எட்டிய வைகை அணை
தற்போது அணைக்கு வினாடிக்கு 2,735 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணை வேகமாக நிரம்பி 70 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் 5,825 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டுள்ளது. 7 பிரதான மதகுகளில் இருந்து 2,735 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக, பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கலோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள நீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலம் பாசனம் பெறும். மேலும், இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வாழ்வாதாரமாகவும் பயன்படுகிறது.