ஓபிஎஸ் மகன் கம்பத்தில் போட்டியில்லை.. ஒதுங்கியது ஏன்.. பரபரப்பு தகவல்
தேனி: சட்டசபை தேர்தலில் கம்பம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப்புக்கு சீட் வழங்கப்படவில்லை. கம்பம் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவான ஜக்கையனுக்கும் சீட் வழங்கப்படவில்லை. அதேநேரம் தேனி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்புக்கு ஆதரவாக விருப்ப மனு தாக்கல் செய்திருந்தால் சீட் அவருக்குத்தான் வழங்கப்படும் என்ற பரபரப்பு நிலவியது.
அதற்கு ஏற்றார் போல் எந்த மறுப்பும் ஓபிஎஸ் தரப்பில் இருந்தோ அல்லது ஓபிஎஸ் மகன் தரப்பில் இருந்தோ வரவில்லை. இதனால் எப்படியும் கம்பத்தி ஜெயபிரதீப்புக்கு சீட் கொடுத்துவிடுவார்கள் என்றே தேனி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
அதிமுக வேட்பாளர்கள்
ஆனால் இன்று அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியிலுமே அதிமுகவே போட்டியிடுகிறது. ஆண்டிபட்டியில் லோகிராஜன், பெரியகுளத்தில் முருகன், போடியில் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கம்பத்தில் சையது கான் போட்டியிடுகிறார்.
போட்டியில்லை
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயபிரதீப்புக்கு கம்பத்தில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவர் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். கம்பத்தில் போட்டியிட்டால், போடி தொகுதியில் அப்பாவிற்காக களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும் என்பதால் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
தவித்தார்
கடந்த இரண்டு முறையுமே ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களம் இறங்கி வேலை செய்து வந்தது ஜெயபிரதீப் தான். எனவே கம்பத்தில் போட்டியிட்டால் அங்கு போய் தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டிய நிலை வரும். அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் ஓபிஎஸ், மற்றும் ஜெயபிரதீப் அதாவது அப்பா, மகன் இரண்டு பேரும் தேர்தலில் போட்டியிட்டால் விமர்சனங்களும் எழும் என்பதால் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
திமுகவின் சவால்
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தேனியில் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகள் கடந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. மீண்டும் அங்கு திமுகவே போட்டியிட வாய்ப்பு அதிகம். ஏன் தேனி மாவட்டத்தின் நான்கு தொகுதியிலுமே திமுகவே போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. போடி தொகுதியில் வெற்றி பெறுவது இந்த முறை ஓபிஎஸ்க்கு மிகவும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் அங்குள்ள திமுகவினர்.