அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை.. குழப்பமும் இல்லை.. கடம்பூர் ராஜூ திட்டவட்டம்
கோவில்பட்டி : அதிமுகவில் எந்த குழப்பமோ, உட்கட்சிப் பூசலோ இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Recommended Video
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம்
கோவில்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பு மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் கடம்பூர் ராஜூ இதை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல அமமுக நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் கடம்பூர் ராஜூ முன்னிலையில் சேர்ந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நவம்பர் 26 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தெரிவித்திருந்தனர்.
தலைமைக் கழகத்தில் மனு
வேட்பு மனுவை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி , விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர். சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட விரும்புபவர்கள் மட்டும் சென்னைத் தலைமை அலுவலகத்தில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கடம்பூர் ராஜூவிடம் மனுக்கள் சமர்ப்பிப்பு
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெற்றுக்கொண்டார். இனாம் மணியாச்சியில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கோவில்பட்டி நகராட்சி, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை, பேரூராட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
அமமுக நிர்வாகிகள் இணைந்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி 29வது வார்டு அமமுக செயலாளர் சகாதேவன் அக்கட்சியில் இருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் சில தொண்டர்களும் கட்சியில் இணைந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, அதிமுக தலைமையில் எந்த ஒரு குழப்பமும் இல்லை .
அதிமுகவில் குழப்பம் இல்லை
கட்சியை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நல்ல முறையில் வழி நடத்தி செல்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது திரைப்படங்கள் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், தற்போது திமுக ஆட்சியில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பட விநியோக உரிமம் தரவில்லை என்றால் அந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சனைதான் மாநாடு படத்திற்கும் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.