குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி... 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் மக்களே
குற்றாலம் அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி தலைமையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.
குற்றாலம்: குற்றால அருவிகளில் 9 மாதங்களுக்குப் பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவியில் குளிக்க வருவோரிடம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருத்தல் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அருவிகள் நகரம் என்று பெருமையோடு அழைக்கப்படும் நகரம் குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளித்தால் மன அழுத்தம், உடல் வலிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆண்டுதோறும் குளித்து மகிழ லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கொரோனா தடை
ஊரடங்கு தளர்வில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், தொற்று பரவல் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது. பல அருவிகளில் நீர் நிலைகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டாலும் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை வைத்தனர்.

பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
குற்றாலம் அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி தலைமையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 10 பேர், பெண்கள் பகுதியில் ஒரு நேரத்தில் 6 பேரை அனுமதிக்கப்படுகின்றனர். ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தலா 10 பேர், பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் பகுதியில் 5 பேர், பெண்கள் பகுதியில் 10 பேரை அனுமதிக்கப்படுகின்றனர்.

தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து நிற்க வரையப்பட்ட வட்டங்களில் நின்று செல்லவேண்டும் மேலும் இங்கு வருவோர் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், அருவிப் பகுதிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருத்தல் வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி
குற்றால அருவிகளில் 9 மாதங்களுக்குப் பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல மாதங்களுக்குப் பிறகு குற்றால நகரம் களைகட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications