ராதாபுரம் 'பாடம்'.. மிரள வைக்கும் திமுக 'ஸ்டிராடஜி'.. 2600 'போர்' வீரர்கள் ரெடி!
திருநெல்வேலி: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் திரைமறைவில் பல்வேறு காரியங்கள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியை அவ்வளவு சீக்கிரம் எவரும் மறந்துவிட முடியாது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழக அளவில் பெரும் கவனம் பெற்ற தொகுதி இது. அந்த தேர்தலில் திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பதுரை ஆகியோர் போட்டியிட்டனர். இறுதியில், அப்பாவுவை விட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இத்தேர்தலில் மீண்டும் அப்பாவு, இன்பதுரை மோதுகின்றனர்.
விசாரணை
இந்த வழக்கில், 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும், சில சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 19,20,21 ஆம் சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது. இதன்படி எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மார்ச் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
ஏற்றுக் கொண்டால்...
அந்த விசாரணையின் போது, சீலிடப்பட்ட கவர்களை திறந்து 203 தபால் வாக்குகளை எண்ணிய போது, அதில் 153 வாக்குகள் அப்பாவுக்கும், 1 வாக்கு இன்பதுரைக்கும், 44 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் இருந்தன. இந்த வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அப்பாவு வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை, நிராகரிக்கப்பட்டால் இன்பதுரையே வெற்றிப் பெற்றவராக தொடருவார்.
மார்ச் 23 அன்று
அதேசமயம், இந்த தபால் வாக்குகள் உரிய Gazetted அலுவலரின் முத்திரையை பெறவில்லை என்று குற்றச்சாட்டை மனுதாரர் எழுப்பியதைத் தொடர்ந்து, இது தொடர்பான இரண்டு பக்க சுருக்கமான அறிக்கையை வரும் 23 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதான் வழக்கு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்.
உரிய நடவடிக்கை
இது ஒருபுறமிருக்க, மீண்டும் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குக்கான அங்கீகாரம் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக திமுக வேட்பாளர் அப்பாவு புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில், "ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணிக்காக கிட்டத்தட்ட 2000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் வகுப்புகள் நடைபெற்றுவரும் சூழலில், அவர்களில் பாதி பேருக்கு மட்டுமே தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணி ஆணையுடன் விண்ணப்பம்-12ஐ பூர்த்தி செய்து, இணைத்துக் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு மட்டும்தான் தபால் வாக்குக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது. ஆணை பெறாமல் இருக்கும் பாதி பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அப்பாவு புகார் மனு கொடுத்துள்ளார். தேர்தல் பணிக்குச் செல்லும் அனைவருக்கும் படிவம்-12ஐ பூர்த்தி செய்து கொடுத்து தபால் வாக்கு தகுதி வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் கட்சியின் தலைமை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
எலக்ஷன் வார் ரூம்
இந்த நிலையில் இதுபோன்ற உள்ளடி வேலைகள் நடப்பதை தடுக்கும் பொருட்டு திமுக தலைமை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாம். குறிப்பாக, 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிய DMK 'Election War Room' இம்முறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாம். திமுக வழக்கறிஞர்களை கொண்ட இந்த கண்காணிப்பு அறை மூலம் சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நிகழ்கிறதா என்பது கண்காணிக்கப்படும். கடந்த 2019 லோக் சபா தேர்தலிலும் திமுகவின் இந்த குழு இயங்கியது. எதிர்வரும் தேர்தலிலும் தபால் வாக்குக்கான அங்கீகாரம் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக திமுக வேட்பாளர் அப்பாவு புகார் அளித்திருப்பதால், இம்முறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என இந்த கண்காணிப்பு குழுவை திமுக அமைத்துள்ளது.
2600 வழக்கறிஞர்கள்
ஒவ்வொரு தொகுதிகள் அளவிலும், காவல் நிலைய அதிகார எல்லைக்குட்பட்ட இடங்களிலும், வாக்குச் சாவடி அளவிலும் இந்த war room ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலைய அதிகார வரம்பின் கீழும் சுமார் 40 முதல் 50 வாக்குச் சாவடிகள் உள்ளன. சில பகுதிகளில், ஒரே சாவடி 160 மற்றும் 160 ஏ என பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாவடிக்கும், திமுக பூத் நிலை முகவர்கள் உள்ளனர் - 2 (பி.எல்.ஏ -2). 80,000 வாக்குச் சாவடிகளுக்கு பி.எல்.ஏ -2 ஐ நியமித்த ஒரே கட்சி திமுக தான், அவற்றின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் (இசிஐ) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும் 2,600 வழக்கறிஞர்களுக்கு இந்த war room-ஐ நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் கலக்கம்
அதுமட்டுமின்றி, இந்த வார் ரூம்ஸ் அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒரு தனி ஆப் ஒன்றும் திமுக சார்பில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம், எதிர்க்கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், புகைப்படமாகவும், வீடியோவாகவும் அனுப்ப முடியுமாம். பிறகு, இந்த ஆதாரங்கள் அனைத்தும் முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாம். ஒட்டுமொத்தமாக, இந்த முறை இம்மியளவு கூட தேர்தலில் எந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்று திமுக மிக உறுதியாக உள்ளதாம்.