மாஞ்சோலை.. மறக்கத்தான் முடியுமா 1999 தாமிரபரணி படுகொலையை? 17 உயிர்கள் துடிதுடித்து மடிந்த வரலாறு!
திருநெல்வேலி: மாஞ்சோலை.. 4 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அந்த மலையை விட்டு மொத்தமாக கண்ணீரும் கதறலுமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். மாஞ்சோலையின் தேயிலைத் தொட்ட வரலாற்றில் மறக்கவே முடியாத பெருந்துயர வரலாறுதான் 1999-ம் ஆண்டு தாமிரபரணி படுகொலைகள் என சரித்திரம் சொல்லும் 17 உயிர்கள் துடிதுடித்து மடிந்த சம்பவம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை. நாடு விடுதலைக்கு முன்னர் சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்தது மாஞ்சோலை நிலம். 1928-ம் ஆண்டு 99 ஆண்டுகால குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் தேயிலைத் தோட்டத்துக்காக 8,374 ஏக்கர் நிலத்தைப் பெற்றது. இங்கிருந்துதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 4 தலைமுறைகளுக்கு முன்னர் மாஞ்சோலையில் குடியேற்றப்பட்டு தேயிலை தோட்டங்களில் 'அடைக்கப்பட்டனர்'.

அன்றில் இருந்து 90 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறைகளை கடந்து விட்டது மாஞ்சோலை. மொத்தம் 5 கிராமங்களை உள்ளடக்கியதுதான் மாஞ்சோலை. ஊத்து, காக்கச்சி, குதிரைவெட்டி, நாலுமுக்கு இவைதான் அந்த கிராமங்கள்.
1928-ம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீனுடன் போடப்பட்ட ஒப்பந்தம்தான்.. நாடு விடுதலைக்கு பின்னர் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதால் இந்த நிலம் தற்போது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. 99 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் தமிழ்நாடு அரசிடம்தான் மாஞ்சோலை நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அதாவது 1928-ம் ஆண்டு மாஞ்சோலை நிலம் தமிழ்நாட்டு அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும். அதற்கு முன்னதாகவே வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி தற்போது மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் மூடப்பட்டு ஒட்டுமொத்த குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

சரி 1999-ல் என்னதான் நடந்தது? மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை ரூ150 ஆக உயர்த்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தேயிலை தோட்ட நிர்வாகம் ஏற்காமல் புறக்கணித்தது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடமும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை கொடுத்திருந்தனர். இதனடிப்படையில் 1999-ம் ஆண்டு ஜூன்
8-ந் தேதி புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டம் நடத்திய பலரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல பெண்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 652 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 652 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜூலை 23-ந் தேதி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் நோக்கி 5,000-க்கும் அதிகமானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். ஆட்சியர் அலுவலகத்தை பேரணி அடைவதற்கு முன்னதாக போலீசார் தடுப்புகளை அமைத்தனர். இதனை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏற்க மறுத்தனர்.
அப்போது பேரணியில் பங்கேற்ற தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் தாமிரபரணி நதிக்கரையை கடந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றனர். இதனை போலீசார் தடுத்து லத்திகளை வீசினர். பின்னர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் பெருங்கூட்டம் தாமிரபரணி நதிக்குள் இறங்கி ஓடியது. அங்கும் போலீசார் விரட்டியடிக்க பலர் நீரில் மூழ்கி அப்படியே துடிதுடித்து மடிந்தே போயினர். மொத்தம் 17 உயிர்கள் அன்று தாமிரபரணி நதி நீரை குடித்தபடியே மாண்டு போயின. இதில் இருவர் பெண்கள். ஒரு கைக்குழந்தையும் தாமிரபரணியில் மூழ்கி மரணித்தது. இத்தாக்குதலில் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் தாக்கப்பட்டனர். இந்த தாமிரபரணி துயரம் முடிவுக்கு வந்துவிட்ட மாஞ்சோலை வரலாற்றில் ஆறாப் பெரும் ரணம்!












Click it and Unblock the Notifications