"3700 கோடி கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம்!" லிஸ்ட் போட்ட சேகர்பாபு! டக்குனு பார்த்த நயினார் நாகேந்திரன்
நெல்லை: நெல்லையப்பர் திருக்கோயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் பல்வேறு முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் பல்வேறு திருப்பணிகள் தொடக்க விழா கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏக்கள் அப்துல் வஹாப், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது..அரசுக்கு தீட்சிதர்கள் கணக்கு தர வேண்டும் - சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்து கொண்டு மலர் தூவி வழிபாடு நடத்தினர்.. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கடந்த 8 ஆண்டுகளாகவே நெல்லையப்பர் திருக்கோவிலில் பணிகள் நடைபெறாமல் இருந்தது. அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம் மற்றும் அம்பாள் சன்னதி மேல் கூரை ஓடு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கோயில் திருப்பணிகள்
ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவடையும். நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணி மற்றும் பொருட்களைப் பத்திரமாக வைக்கப் பாதுகாப்பு அறை கட்ட 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் ஒரு மாதத்திற்குள் விரைவில் தொடங்கும். வரும் ஆண்டில் 1500 திருக்கோவில்களில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது.
பழமையான கோயில்கள்
தமிழ்நாட்டில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்களின் திருப்பணிக்கு 100 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ 60 கோடிக்கு ஏற்கனவே அரசாணை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் மீதமுள்ள 40 கோடி ரூபாய்க்கு அரசாணை வெளியிடப்பட்டு மானிய கோரிக்கைக்கு முன்னதாகவே அனைத்து பணிகளும் நிறைவு பெறும்.
புனரமைக்க நிதி
கன்னியாகுமரியில் நூறாண்டு பழமான சிறிய கோயில்களைச் சீரமைக்க 100 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. நகர்ப்பகுதிகளில் இருக்கும் 200 கோயில்களைப் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்னல் வேகத்தில் கோயில்கள் குடமுழுக்கு திருப்பணிகள் நடந்து வருகிறது. அதேபோல ஓடாத தேர்களை ஓட வைக்கத் தேர் திருப்பணிகளும் தனியாக நடந்து வருகிறது.
கோயில் சிலைகள்
கடந்த ஆட்சியில் தமிழக முழுவதும் 11 கோவில் சிலை பாதுகாப்பு மையங்கள் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டன. இதனால் காவலர்கள் நியமித்துப் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.. இதை இப்போது சரி செய்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்திற்குள் காவலர்களை நியமிக்க அறநிலையத்துறை சார்பில் அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
3700 கோடி கோயில் சொத்துகள்
தற்போது வரை தமிழகம் முழுவதும் அறநிலை துறைக்குச் சொந்தமான 3700 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு, அதை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள இதில் இருந்து கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படும். அதேபோல அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் இகுத்தும் வாகனங்கள் சீரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகள்
அறநிலை துறைக்குச் சொந்தமான 4 கல்லூரிகள் இப்போது இயங்கி வருகிறது. மற்ற கல்லூரிகளுக்கான அனுமதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், மிக விரைவில் அது முடிந்தவுடன் மற்ற கல்லூரிகளுக்கான அனுமதி வழங்கப்படும். நெல்லையப்பர் திருக்கோவில் தேருக்குக் கண்ணாடி தகடு அமைப்பது தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த மானிய கோரிக்கையில் வெளியிடப்படும்" என்றார்.