Nellai kavin: கவின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
திருநெல்வேலி: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கவின் காதலியின் தம்பியான சுர்ஜித்தை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடியினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கவினின் பெற்றோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). கவினும், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினியும் பள்ளிப் பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களது இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஐடி ஊழியரான கவின் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்காக வந்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக சுபாஷினி பணிபுரியும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் மாநிலத்தையே உலுக்கிப் போட்டுள்ளது.
இந்த வழக்கில் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரையும், அவரது தந்தையையும் கைது செய்தனர். இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. துணை காவல் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஸ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுபாஷினியின் தம்பியான சுர்ஜித்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கவினின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவினின் பெற்றோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் தனியார் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். இதைத்தொடர்ந்து நெல்லையில் உள்ள கவினின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications