தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் வேலை செய்தவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் சேகர்பாபு
தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக வேலை செய்பவர்கள் ஒரு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தென்காசி: தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக வேலை செய்பவர்கள் ஒரு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவினை அளித்தால் அவர்களை வாடகைதாரர்கள் ஆக ஏற்று உத்தரவு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மாநிலம் முழுவதும் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள ஆலயங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழகம் முழுவதும் கோயில்களில் விடுவிக்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் வழங்கிட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபுவிடம், தென்காசி மாவட்ட திருக்கோயில் தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் தங்கள் மனுவில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கோயில்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொகுப்பூதிய பணியாளர்கள் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பணியிடப் பட்டியல்களில் இடம் பெற்ற, இடம்பெறாத பணியிடங்களில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு கடந்த 22.06.2021 அன்றிலிருந்து ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் திருக்கோயில் பணியிடப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பணியிடங்களில் புதிதாக பணியாளர்கள் பணி நியமனம்செய்வதற்கும், பணியிடப்பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களை புதிதாக உருவாக்கி அப்பணியிடங்களிலும் பணியாளர்களை நியமனம் செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளர்கள் அனைவரும் ஓரிரண்டு ஆண்டுகளில் தொடங்கி 15 முதல் 20 ஆண்டு காலமாக அர்ச்சகர், பூசாரி, மடப்பள்ளி பரிசாரகாராகர், நித்திய முறைவேலைக்காரர், காவலர், அலுவலகப் பணிகளை கவனித்துக்கொண்டும் பணி செய்து வருகின்றனர்.

கோயில் தக்கார், அறங்காவலர் தீர்மானங்களுடனும், தீர்மானங்கள் இல்லாமலும் பணியிடப்பட்டியலில் இடம்பெற்ற பணியிடங்களிலும், பணியிடப்பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களிலும் மாதம் சுமார் கூடுதல் தொகையாக ரூ.4500 மட்டும் பெற்று, வேறு எந்த சலுகைகளும் இன்றி இறைவனுக்கு தொண்டு செய்யும் நோக்கில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பல பணியாளர்களுக்கு 40முதல் 55 வயது ஆகிவிட்ட சூழலில் அவர்களால் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பணிபுரிந்து வரும் தினக்கூலி,தொகுப்பூதியப் பணியாளர்களின் வாழ்வாதாரமானது மேற்படி உத்தரவினாலும் நிர்வாகத்தின் நடவடிக்கையினால் தினக்கூலி,தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு பணி இழப்பு ஏற்பட்டு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறான நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் உள்ள அனைத்து தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளர்ளின் குடும்பங்கள், வாழ்வாதாரம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தக்கார், அறங்காவலர் தீர்மானங்களுடனும் தீர்மானங்கள் இல்லாமலும், பணியிடப்பட்டியலில் இடம்பெற்ற பணியிடங்களிலும், பணியிடப்பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் செய்து வந்த பணியிடங்களிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணி புரிபவர்களின் பணி, ஒரு மாதத்திற்குள் நிரந்தரம் செய்யப்படும் என்றார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவினை அளித்தால் அவர்களை வாடகைதாரர்கள் ஆக ஏற்று உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் பத்தாண்டு காலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் குடமுழுக்கு மராமத்து பணிகள் நடக்காமல் இருந்துள்ளது. இதற்கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வைரஸ் தொற்று முடியும் வரை கோயில்களில் அன்னதானம் பொருளாக மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கொரோனா பரவல் உச்சத்திலிருந்து தமிழகம் விடை பெற்று நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் என்று தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அதிமுக ஆட்சியில் கோயில் சிலைகள் மாற்றப்பட்டதாக கூறப்படும் புகார்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications