யாருப்பா உள்ள..? சுவர் ஓட்டைக்குள் இருந்து நெளிந்து வெளியே வந்த கொள்ளையர்கள்.. ‘வந்தது வந்துட்டோம்!’
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் நேற்று நள்ளிரவில் ஓட்டை போட்டு உள்ளே இறங்கிய இரண்டு பேர் கடைக்குள் சாவகாசமாக மது குடித்துள்ளனர்.
போலீசார் ரோந்து சென்றபோது, டாஸ்மாக் சுவற்றில் துணை தென்பட்டதைப் பார்த்து உள்ளே லைட் அடித்துப் பார்த்தனர். அப்போது உள்ளே கொள்ளையர்கள் இருந்தது தெரியவந்தது.
உச்ச போதையில் இருந்த அவர்களை அதே ஓட்டை வழியே வெளியே வரவழைத்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
சுவரில் போட்டிருந்த சிறிய ஓட்டை வழியாக பாம்பு போல நெளிந்துகொண்டு போதை ஆசாமிகள் வெளியே வந்தது தொடர்பான வீடியோ தீயாகப் பரவி வருகிறது.

டாஸ்மாக் கடை
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு போலீசார் ரோந்து பணியின் போது கடையின் சுவற்றை துளையிடப்பட்டிருந்தது.

ஓட்டை வழியாகவே வந்த திருடர்கள்
இதையடுத்து அங்கு சென்று லைட் அடித்துப் பார்த்த போலீசார் உள்ளே அமர்ந்து மர்ம நபர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். அவர்களை போலீசார் வெளியே வரச் சொன்னதும், அவர் உச்ச போதையில் நெளிந்தபடி, அந்த ஓட்டை வழியாக போராடி வெளியே வந்தனர்.

பணம் திருட்டு
அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியது தெரியவந்தது.

வந்தது வந்துட்டோம்
மேலும், மது பாட்டில்களையும், திருடிச் செல்ல முயன்றுள்ளனர். 'வந்தது வந்துட்டோம், சரக்கு அடிச்சிட்டு போவோம்' என அங்கேயே அமர்ந்து மது அருந்தியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கவரைப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். டாஸ்மாக் கடையில் சுவற்றைத் துளையிட்டு கொள்ளை அடிக்க முயன்ற இருவர் சாவகாசமாக மது அருந்திய போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications