பர்த் டே பார்ட்டி..! மண்டைக்கேறிய மதுபோதை! ஒரே அடி... பிறந்த நாளே இறந்தநாளாக மாறிப்போன சோகம்..!
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிறந்தநாள் மதுவிருந்தில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை நண்பன் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், பிறந்தநாளே இறந்தநாளாக மாறிய பரிதாபகரமான நிகழ்வால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்தார்.
பிறந்தநாளான நேற்று மாரிமுத்து தமது நண்பர்களுக்கு மதுவிருந்து வைத்தார். அலமாதி ஏரியில் மாரிமுத்து தமது நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி பின்னர் மது அருந்தியுள்ளனர்.
திருவள்ளூரில் அதிர்ச்சி
அப்போது திடீரென நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராமமூர்த்தி பர்த்டே பேபி மாரிமுத்துவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் மாரிமுத்துவை சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இளைஞர் கொலை
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நாளாக மாறிய பிறந்தநாள்
இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய பர்த்டே பேபி பிறந்தாளிலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் பரபரப்பு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லை மீறிச் செல்வது வழக்கமாகி வருகிறது. முன்பெல்லாம் பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் முகத்தில் கேக் பூசுவது என்ற வழக்கம் மாறி தற்போது பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்களை தாக்குவது, கன்னத்தில் அடிப்பது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது என்று மாறிவிட்டது. இந்நிலையில் மது விருந்தில் இளைஞரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.