தீபாவளி சீட்டு நடத்தியவர் எஸ்கேப்.. வாடிக்கையாளர்கள் சாலைமறியல்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர், திடீரென தலைமறைவானதால், அவரை உடனடியாக கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜே.பி. ஜோதி என்பவர், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் ஏஜென்சி மூலம் தீபாவளி பண்டு நடத்தி வந்தார். மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் தெரிவித்து பணம் வசூல் செய்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!
தீபாவளி சீட்டு
இதேபோல், மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார். ஜோதியின் இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி, தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு உட்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டு சீட்டு கட்டி வந்துள்ளனர்.
கோடிகணக்கில் வசூல்
மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏஜென்ட்டுகள் நியமித்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் ஜோதி இழுத்தடித்து வந்துள்ளார். இதுபற்றி பணம் கட்டியவர்கள் சென்று கேட்டபோது சில நாட்களில் பொருட்கள் வந்துவிடும் என்றும், பின்னர் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
தலைமறைவு - அதிர்ச்சி
இந்நிலையில் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு, அதன் உரிமையாளரான ஜோதி, திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் காட்டுத்தீயைப் போல் அப்பகுதியில் பரவியது. ஏஜென்சி உரிமையாளர் ஜோதி, மாயமானதாக வெளியான தகவல் அறிந்தது பணம் கட்டிய பொதுக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலை மறியல்
இதையடுத்து பணம் கட்டியவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி கடை முன்பாக திரண்டனர். பின்னர், திருநின்றவூர் - பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபஸ் கல்யாண், வாகனமும் போக்குவரத்து நேரிசலில் சிக்கியது. சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பெரியபாளையத்திலிருந்து திருநின்றவருக்கும், திருநின்றவூர் பகுதியில் இருந்து பெரியபாளையம் பகுதிக்கு செல்லும் வாகனங்களும் சாலையில் அணிவகுத்து நின்றன.
தனியார் பேருந்துகள்
அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் அரை மணி நேரத்துக்கு மேலாக ஒன்றன் பின் ஒன்றாக போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிவிரைவுப்படை காவல்துறையினர், சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.