திருவள்ளுவர் பல்கலையில் அம்பேத்கர் படிப்புகள் துறை தொடங்காதது ஏன்? உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நிதிநிலை நெருக்கடி காரணமாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் துறையை தற்போதைக்கு துவங்க இயலாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக நிதிநிலை சீராகும் பட்சத்தில், அடுத்த கல்வியாண்டில் இந்த துறையை துவங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 'அம்பேத்கர் படிப்புகள்' என்ற பெயரில் தனித் துறையை அமைக்க 2006-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்த துறையை தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக, பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவானது நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதால் தற்போதைக்கு இந்த புதிய துறையை துவங்க இயலாது என்றும், நிதி நிலை சீரானதும் இத்துறையை துவங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், நிதிநிலை சீராகும்பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் அம்பேத்கர் படிப்புகள் துறையை துவங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications