ஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்
ஆரணி: கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தமிழகத்தின் பல இடங்களிலும் பெய்து வரும் மழை, வெப்பத்தால் தவித்துள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அதே சமயம் ஆரணி சுற்றுவட்டாரத்தில் அடித்த சூறைக்காற்றால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்றோடு முடிந்துவிட்டது. இதனால் மக்களை வெயில் வாட்டி வதைத்தாலும் ஆங்காங்கே கோடை மழை பெய்தது மக்களை நிம்மதியடைய செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில், இடி மின்னலுடன் 1 மணி நேரம் மழை கொட்டியது. எட்டயபுரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் வீடுகள் சேதமடைந்தன. விவசாய தோட்டத்தில் இருந்த முருங்கை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையில் சந்தவாசல், சின்னபுஷ்பகிரி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்துள்ளன. இதே போல மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் கோடை மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
இந்த கோடை மழையால் தற்போது கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது ஆரணி சுற்றுவட்டாரம் தான். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில், பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சேவூர்,இரும்பேடு , கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆரணி - வேலூர் சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.
ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான சந்தவாசல், சின்னபுஷ்பகிரி, கண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. காற்றின் வேகத்தில் சந்தவாசல், படவீடு கிராமங்களில் பல நூறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 70,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடிக்கும் மேல் இருக்கும் என விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதமடைந்தது குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் இதுவரை வந்து சேதத்தை பார்வையிடவில்லை என விவசாயிகள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளனர். சேதம் குறித்து கவலையுடன் பேசிய விவசாயிகள், ஒவ்வொரு வாழை மரங்களுக்கும் சுமார் 300 ரூபாய் வரை செலவாவதாக கூறியுள்ளனர்.
வாழை குலை தள்ளி அறுவடைக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், திடீரென வந்த சூறைக்காற்றும், மழையும் தங்களது வாழ்வாதாரத்தை முடக்கி விட்டதாக கூறியுள்ளனர். அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications