திருவண்ணாமலை தீபம் காண வரும் 30 லட்சம் பக்தர்கள்..பார் கோடுடன் கூடிய பாஸ்..டிஜிபி சைலேந்திரபாபு
திருவண்ணாமலை: தீப திருவிழாவை காண இந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பார் கோடுடன் கூடிய பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக பக்தர்களால் போற்றப்படுவது திருவண்ணாமலை. மலையே சிவமாக போற்றப்படுவதால் பக்தர்கள் நாள்தோறும் கிரிவலம் வந்து வணங்குகின்றனர். இங்கு தீப திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரியும் காலை,மாலை பஞ்ச மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
நாளை மறுநாள் மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா நாளை கொடியேற்றம்..இன்று முருகன் தேர் வெள்ளோட்டம்
டிஜிபி சைலேந்திரபாபு
செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, டிசம்பர் 6ஆம் தேதி தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அதிக அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு தீப திருவிழா கடந்த 4 நாட்களாக கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீப திருவிழா 6ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் காவலர்கள்
திருவண்ணாமலை நகரத்திற்குள் வரக்கூடிய நான்கு முக்கியமான சாலைகளிலும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. நகரத்திற்குள் வரும் வாகனங்களை தணிக்கை செய்து வருகிறோம். 52 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஐஜி கண்ணன் தலைமையில் 4 டிஐஜி, 27 எஸ்பி 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பார்கோடுடன் பாஸ்
மாவட்ட ஆட்சியர், ஐஜி, எஸ்பி தலையில் இன்றைய தினம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்படும். பார் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்படும். அந்த பாஸை சோதனை செய்துதான் கோவிலுக்குள் அனுப்புவோம். போலி பாஸ் வைத்து கோவிலுக்குள் நுழைய முடியாது என்றும் சைலேந்திரபாபு தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்புடன் எந்த வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வார்கள்.
உள்ளூர் மக்களின் விபரங்களும், வெளியூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வருபவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.