பயங்கரம்! விஷப்பூச்சி கடித்ததில்.. துடிதுடித்த 3 வயது குழந்தை.. பரிதாப பலி.. என்ன பூச்சி அது?
திருவாரூர்: திருவாரூர் அருகே விஷப்பூச்சி ஒன்று கடிதத்தில் 3 வயது குழந்தை துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அப்பகுதியில் ஒரு வகையான விஷப்பூச்சிகள் சுற்றித்திரிவதாகவும், அவற்றை கொல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலட்சியம் வேண்டாம்
பொதுவாக, பிறந்த புதிதில் குழந்தைகளை பார்ப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. குழந்தையின் பசிக்கு பாலூட்டி, அதை தூங்க வைப்பதே தாய்மார்களின் வேலையாக இருக்கும். ஆனால், குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் அவற்றை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்தக் குழந்தைகள் நடை பயின்ற மகிழ்ச்சியில் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கவும், கீழே செல்லும் பூச்சி, வண்டு முதலியவற்றை கையில் எடுக்கவும் முயற்சிக்கும். இந்த சமயத்தில்தான் நிறைய விபரீதங்களும் நிகந்துவிடும். அப்படியொரு சம்பவம்தான் திருவாரூரில் நடைபெற்றுள்ளது.
தனியாக விளையாடிய குழந்தை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள திட்டாணிமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் - வேதநாயகி தம்பதியர். இவர்களுக்கு தட்சயா என்ற 3 வயது குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராஜேஷும், வேதநாயகியும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தை தட்சயா வீட்டு வாசலில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தது.
கதறி அழுத குழந்தை
அப்போது திடீரென குழந்தை கதறி அழுதுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்து ராஜேஷும், வேதநாயகியும் வெளியில் வந்து பார்த்து குழந்தையை தூக்கினர். எவ்வளவு சமாதானம் செய்து பார்த்தும் குழந்தை விடாமல் அழுதது. பின்னர் சிறிது நேரத்தில் குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்டநேரம் அழுதததால் குழந்தை சோர்ந்திருக்கும் என நினைத்த பெற்றோர், மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது தான் வீட்டு வாசலில் வண்டு போன்ற பெரிய பூச்சியை பார்த்துள்ளனர்.
விஷப்பூச்சி கடி - உயிரிழப்பு
இதையடுத்து, குழந்தையின் சட்டை கழற்றி பார்த்த போது கைப்பகுதியில் பெரிய அளவில் வீங்கியிருந்தது. இதனால் அந்த பூச்சிதான் குழந்தையை கடித்திருக்கிறது என தெரிந்துகொண்ட பெற்றோர், மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு குழந்தை சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. மேலும், குழந்தையை கடித்தது விஷப்பூச்சி என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். விஷப்பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அப்பகுதியில் ஒரு வகையான விஷப்பூச்சிகள் சுற்றித்திரிவதாகவும், அவற்றை கொல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.