வங்கி லாக்கரில் இருந்து மீட்கப்பட்ட மரகதலிங்கம்... ஒப்படைக்க கோரும் தருமபுரம் ஆதீன மடாதிபதி
திருக்குவளை மரகதலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவாரூர்: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட மரகத லிங்கத்தை மீண்டும் திருக்குவளை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று தருமபுர ஆதீன இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க ஸ்தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு, உள்ளிட்ட ஆலயங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினத்தை அடுத்த திருக்குவளையில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான கோவில் இது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள மரகத லிங்கம் பிரசித்தி பெற்றது.
சப்த விடங்களில் ஒன்றான இக்கோவிலில், 'அவனி விடங்கர்' என்றழைக்கப்படும் மரகதலிங்கத்தை, பிரம்மா, அகத்தியர், பஞ்ச பாண்டவர்கள் உட்பட பலர் வழிபட்டதாக ஐதீகம் உள்ளதாக நம்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடுபோனது. மரகதலிங்கம் மாயமானது குறித்து காவல்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சிலை தடுப்பு காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை செய்தனர். அப்போது தஞ்சையைச் சார்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகத லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகத லிங்கம் என்றும் தெரியவந்தது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று தருமபுர ஆதீன இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலை தடுப்பு டிஐஜி இந்த லிங்கம் திருக்குவளை ஆலயத்திற்கு சொந்தமானது என்பதை தங்களிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டதாகவும், இந்த லிங்கத்தை தங்களிடம் ஒப்படைத்து நித்திய பூஜைக்கு வழிவகை செய்யவேண்டும் என்று தருமபுர ஆதீன மடாதிபதி விடுத்துள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பொன்னி ஐபிஎஸ், கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோர் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்தனர். அப்போது போலீசார் தாங்கள் கொண்டு வந்திருந்த மரகத லிங்கத்தின் புகைப்படத்தை தருமபுரம் ஆதீன மடத்தில் உள்ள தொலைந்து போன மரகத லிங்கத்தின் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்து கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து விரைவில் சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
கும்பகோணத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில். இறைவன் பிரம்மபுரீஸ்வரர், இறைவி வண்டமர் பூங்குழலம்மை. இங்குள்ள ஈசன் 'அவனி விடங்கர்.' இவர் ஆடியது 'பிருங்க நடனம்.' வண்டு மலருக்குள் குடைந்து செல்வதைப் போன்றது இந்த நடனம். நவக்கிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்யலாம்.












Click it and Unblock the Notifications