கனமழை எச்சரிக்கை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களை மக்கள் இருப்பு வைத்துக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று கூறிய புவியரசன், இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நாளைய தினம் ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.