திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு.. விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!
திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
திருவாரூர்: திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். ஏற்கனவே டி. ராஜா இந்த இடைத்தேர்தலுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தார்.
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. இந்த சேதத்தில் இருந்து இப்போதுதான் மக்கள் மீண்டு வருகிறார்கள். மீட்பு பணிகள் இப்போதுதான் நடந்து வருகிறது.
இப்போது தேர்தல் நடந்தால் மீட்பு பணிகள் பாதிப்படையும். மக்கள் வாக்களிப்பது குறையும். அதேபோல் தேர்தல் முடிவுகளும் பாதிக்கப்படும். அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
தற்போது இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க போவதாக கூறியுள்ளனர். அடுத்த வாரம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
மனு விரைவாக விசாரிக்கப்படும், அனைத்து மனுக்கள் மீதான விசாரணையும் விரைவில் நடக்கும். தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் இந்த மனுவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது.
இதனால் திருவாரூர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் பெரிய சந்தேகமும், பரபரப்பும் எழுந்துள்ளது.