கியா ரே செட்டிங்கா? திருவாரூர் இடைத் தேர்தலிலும் கமுக்கமாக "வேலை" பார்த்த தமிழக அரசு!
திருவாரூர் தேர்தலுக்கு பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கடைசி வரை வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது பல விமர்சனங்களை சந்தித்துள்ளது.
Recommended Video
திருவாரூர்: திருவாரூர் தேர்தலுக்கு பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கடைசி வரை வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது பல விமர்சனங்களை சந்தித்துள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கு ரெட் அலர்ட்டைக் கையில் எடுத்தது போல, இந்தத் தேர்தலையும் நடத்த விடாமல் கமுக்கமாக வேலை பார்த்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களையும் தனி அறிக்கையாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதிமுக அறிவிக்கவில்லை
கடந்த வாரமே அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திருவாரூர் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் இரண்டு நாள் முன் நடப்பதாக இருந்து பின் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வேட்பாளர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.
பாஜக பேசவில்லை
அதே சமயம் பாஜக இந்த தேர்தல் குறித்து எந்த பெரிய ஆலோசனை எதுவும் செய்யவில்லை. நேற்று மாலை இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதன்பின் வேட்பாளர் தேர்வு குறித்தோ, திருவாரூர் தேர்தல் குறித்தோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதிமுக அரசு
இந்த நிலையில்தான் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தமிழக அரசு கேட்டுக்கொண்டதால்தான் தேர்தலை ரத்து செய்தோம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்தான் திருவாரூர் தேர்தலை ரத்து செய்தோம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவும்
அதேபோல் தற்போது பாஜகவும் இந்த தேர்தல் ரத்தை வரவேற்று இருக்கிறது. தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சரிதான் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் இது எதிர்பார்த்த முடிவுதான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சந்தேகம்
இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜகவின் இந்த நடவடிக்கை நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எல்லாம் தெரிந்தது போல வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது, ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது என்று நிறைய விஷயங்கள் சந்தேகத்தை எழுப்புகிறது. இதெல்லாம் தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் மக்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏன் இப்படி ரகசியம்
திருப்பரங்குன்றம் தேர்தலின்போதும் ரெட் அலர்ட்டைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்தச் சொன்னவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இதுதொடர்பாக அவர் எழுதிய விவகாரமே தேர்தல் ஆணையம் மூலம்தான் தெரிய வந்தது. தற்போது திருவாரூர் விவகாரத்திலும் இப்படி ஒரு கடிதம் போயிருப்பதையும் தேர்தல் ஆணையம்தான் அம்பலப்படுத்தியுள்ளது. இரண்டு விவகாரத்திலும் தமிழக அரசு செயல்பட்டுள்ள விதம் பல கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளது. இந்த முடிவுகளைத் தெரிந்து கொண்டுதான் அதிமுகவும், பாஜகவும் படு அமைதியாக இருந்துள்ளன என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.