வெடித்தது கலகம்.. டிஆர்பி ராஜா அமைச்சரா? “திமுகவுக்காக நாங்க இல்ல!” எம்எல்ஏ ஆதரவாளர்கள் போர்க்கொடி
திருவாரூர்: மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. நாளை தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்க இருக்கும் நிலையில், திருவாரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணரை அமைச்சராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் போஸ்டரை பகிர்ந்து வருவது மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சியமைத்து கடந்த மே 7 ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. எனவே, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. அமைச்சர்கள் சிலர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்பட்டன.

குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் ஒரு அமைச்சர் கூட இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் திமுகவினரின் மனக்குறையை போக்கும் வகையில் அங்குள்ள எம்.எல்.ஏ ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.
அதேபோல், பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக தகவல்கள் தெரிவித்தனர். அத்துடன் திருவாரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான பூண்டி கலைவாணருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஆளுநர் மாளிகை முதன்மை செயலாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், "மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்கிறார். ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் 11 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை அமைச்சரவைப் பதவியில் இருந்து ஆளுநர் விடுவித்து உள்ளார்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நேற்று இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து டிஆர்பி ராஜாவை வாழ்த்தி பலர் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம் இந்த முடிவுக்கு கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
குறிப்பாக பூண்டி கலைவாணருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் பூண்டி கலைவாணருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்ட ஒரு போஸ்டரையும் பகிர்ந்து வருகின்றனர்.

"திருவாரூர் மாவட்டம் திமுக கோட்டையாக மாற்றி கழகத்திற்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்கள் பூண்டி கே.கலைவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும். கழகத்திற்காக நாங்கள் இல்லை எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் கழகத்தில் நாங்கள் இருக்கோம். இவன், திருவாரூர் திமுக கழகம்" என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக பூண்டி கலைவாணருக்காகவே தாங்கள் திமுகவில் இருப்பதாக பலர் பேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணருக்கு நெருக்கமான பலரால் இந்த போஸ்டர் பகிரப்பட்டு வருவது, மாவட்ட திமுக நிர்வாகத்திற்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications