சர்ச்சைகளுக்கு நடுவே.. சக்கை போடு போட்ட திருப்பதி லட்டு.. 4 நாளில் மட்டும் சேல்ஸ் எவ்வளவு பாருங்க!
திருப்பதி: திருப்பதி கோவில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில், மாட்டின் கொழுப்பு கலந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் திருப்பதி லட்டிற்கு கொஞ்சம் கூட மவுசு குறையவில்லை என்பது கடந்த சில நாட்களாக நடந்த விற்பனை மூலம் தெரியவந்துள்ளது.
திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது. இந்த விவகாரம் திருப்பதி செல்லும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கபபட்டதாக வெளியான சர்ச்சையே ஓயாத நிலையில் லட்டுவில் குட்கா கிடந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்பவர் பிரசாதமாக வாங்கிய லட்டுவில் குட்கா கிடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. திருப்பதி கோவிலில் வழங்கப்படும் பிரசாத லட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றது.
இப்படி உலக புகழ் பெற்ற பிரசாத லட்டுவில் விலங்கின் கொழுப்பு, குட்கா கிடந்தாக புகார் என அடுத்தடுத்து கிளம்பி வரும் சர்ச்சைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், குட்கா கிடந்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி லட்டுவை சுற்றி சர்ச்சைகள் வெடித்தாலும் இது லட்டு விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அதன் விற்பனை மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும், அதாவது லட்டு மீதான சர்ச்சை உச்சத்தில் இருந்த நாட்களில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேல் லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது.
19 ஆம் தேதி 3.59 லட்சம் லட்டுக்களும், 20 ஆம் தேதி 3.17 லட்சம் லட்டுக்களும், 21 ஆம் தேதி 3.67 லட்சம் லட்டுக்களும், 22 ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுக்களும் விற்பனையாகியிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல, லட்டுவின் சுவை முன்பை விட கூடியிருப்பதாக பக்தர்களும் திருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விஜயவாடாவை சேர்ந்த லக்ஷ்மி நாராயாண என்ற பக்தை கூறுகையில், "லட்டுவின் சுவை முன்பை விட அருமையாக உள்ளது. லட்டுவின் சுவை மற்றும் மணத்திலும் மாறுபாடு உள்ளது" என்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நைவேத்தியத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கடந்த ஆட்சியில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இதனால் நெய்யை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த நெய்யில் கலப்படம் செய்திருந்தது உறுதி ஆனது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வைணவ பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முன்னதாக லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்த நிலையில், நேற்று காலை 6 மணியில் இருந்து 10 மணிவரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கக்கிணறு அருகில் பரிகாரப் பூஜை செய்யப்பட்டது. அதற்காக 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.
யாக பூஜையில் வாஸ்து ஹோமம், பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் வைக்கப்பட்ட புனிதநீர் மூலவர் சன்னதி, பூந்தி மற்றும் லட்டுகள் தயாரிக்கும் கூடம், அன்னப்பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டுகள் விற்பனை செய்யப்படும் கவுன்ட்டர்கள், கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் தெளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications