திருப்பூர் அருகே மளிகை கடைக்கு விறுவிறுன்னு போன மணிகண்டன்.. தங்கத்தை பார்த்ததுமே சபலம்.. இப்ப ஆப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் மளிகை கடை நடத்தி வரும் செல்லாத்தாள் என்ற மூதாட்டியிடம் கடந்த மார்ச் மாதம் இரண்டு இளைஞர்கள் காய்கறி வாங்குவது போல் வந்து தங்கச்சங்கிலியை திருடியிருந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், தனிப்படை அமைத்து நகை திருடியவர்களை தேடி வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து மற்றொரு வாலிபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அசந்தால் நகையை திருடிச் செல்லும் கும்பல்கள் தற்போது அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் பெண்கள் தங்கச்சங்கிலி அணிந்து சென்றால், கண் இமைக்கும் நேரத்தில் உடனுக்குடன் திட்டமிட்டு, ஹெல்மெட் அணிந்து வந்து நகையை திருடுகிறார்கள் திருடர்கள். அதேபோல் வாசலில் கோலம் போடும் பெண்களை குறிவைத்தும் சிலர் நகை திருடுகிறார்கள்.

சிலர் கடைகளில் வியாபாரம் செய்யும் மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் பொருள் வாங்குவது போல் நடித்து நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் நடந்திருந்தது. குற்றவாளிகள் இரண்டு பேரும் தற்போது சிக்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள பாறக்கடையைச் சேர்ந்த 65 வயதாகும் செல்லாத்தாள் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆசாமிகள் காய்கறி வாங்குவது போல் நடித்து செல்லாத்தாள் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து மூலனூர் போலீசில் செல்லாத்தாள் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வந்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் ரதின் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அண்மையில் சிறையில் அடைத்தனர்.
மற்றொரு நபரான அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இவர் மீது பழனி, நிலக்கோட்டை, கீரனூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதை போலீசார் விசாரணையின் போது கண்டுபிடித்தனர். அவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications