எம்.எல்.ஏ.வின் கையை வெட்டுவேன்.. திருப்பூரில் மிரட்டிய தொழிலாளி
திருப்பூர்: திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என்.விஜயகுமாரின் கை என்னால் வெட்டப்படும் என எழுதிய பதாகையுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை அடுத்த நாகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாககுமார், வேலுச்சாமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாககுமார் கொள்ளை சம்பவம் குறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பொருட்களை திருடியதாக வீட்டு உரிமையாளர் வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் பெருமாநல்லூர் காவல் நிலைய போலீசாரிடம் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் வேலுச்சாமியை கைது செய்ய வேண்டாம் என கூறியதாகவும், இதனால் போலீசார் அவரை கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர் வழக்கை திரும்ப்ப் பெற்றால் திருடுபோன பொருட்களை மீட்டுத் தருவதாக போலீசார் கூறியதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார் நாககுமார்.ஆனால் உடமைகளை இதுவரை தனக்குத் திருப்பித் தரவில்லை எனவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் நாககுமார் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது வீட்டில் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமாரின் கையை வெட்ட உள்ளேன் என எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாககுமார் வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுத்ததாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications