பஸ் ஸ்டாண்டில் மது குடித்தவரை தட்டி கேட்டவர் படுகொலை.. உடுமலை அருகே பயங்கரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, பேருந்து நிறுத்தம் பகுதியில் மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஆதவற்ற முதியவரை, இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையம் ஊராட்சியை அடுத்துள்ளது கொங்கலக்குறிச்சி என்ற கிராமம். இந்த கொங்கலக்குறிச்சி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தும் பகுதியில், சுமார் 60 வயது வரை மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் ஒருவர் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், கொங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வீரமலை என்பவரது மகன் பழனியப்பன் என்பவர், அங்குள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கிக்கொண்டு, மது அருந்துவதற்காக, முதியவர் தங்கியிருந்த பேருந்து நிறுத்தத்துக்குள் இரவில், மது பாட்டிலுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த முதியவர், இங்கு அமர்ந்து மது அருந்த வேண்டாம் என்றும், வெளியே சென்று மது அருந்துங்கள் என்றும் பழனியப்பனிடம் கூறியதாக தெரிகிறது.
பேருந்து நிறுத்தும் பகுதியில் தன்னை மது அருந்தக்கூடாது என கூறியதால் ஆத்திரம் அடைந்த பழனியப்பன், அருகில் கிடந்த கம்பியை எடுத்து முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த முதியவர் கீழே விழுந்துள்ளார். எனினும் அதனை கண்டுகொள்ளாமல், பழனியப்பன், மது அருந்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் காலை பேருந்து நிறுத்தத்திற்குச் சென்ற பொதுமக்கள், அங்கு இறந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், இறந்த முதியவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், தளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் சம்பவ பகுதிக்குச் சென்ற உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ஆதரவற்ற முதியவரை தாக்கி கொலை செய்த கூலித்தொழிலாளி பழனியப்பனை கைது செய்தனர்.
பேருந்து நிறுத்தம் பகுதியில் மது குடிக்க வேண்டாம் என கூறிய ஆதரவற்ற முதியவர், இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம், உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.