திருப்பூரில் 7 வீடுகள் கட்டி செட்டிலான வங்க தேச வாலிபர்.. வில்லனான வீடு பத்திரம்.. பெரிய ட்விஸ்ட்
திருப்பூர்: திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் (40) என்பவர் தனது மனைவி கீதா (36) என்பவருடன் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை விரிவுபடுத்த பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். வீட்டு பத்திரக்கடனால் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மை அம்பலமாகி உள்ளது. இதற்காக அவரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ. நகரில் 40 வயதாகும் சயன் என்பவர் தனது மனைவி கீதாவுடன் வசித்து வருகிறார். பின்னலாடை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை விரிவுபடுத்துவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அந்த பணத்தில் கூடுதலாக ஆறு வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு கடன் தொகையை மாதா மாதம் ரூ.63 ஆயிரம் செலுத்தி வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சயன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவர் கடனை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. சென்னையில் இருந்து திரும்பிய சயன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நான்கு மாத கடன் தொகையை மொத்தமாக செலுத்தியிருக்கிறார்.
ஆனால் அந்த தொகை செயலாக்க கட்டணத்திற்கே சரியாகிவிட்டது என கூறி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உள்பட 30 பேர் சயன் வீட்டிற்கு வந்துள்ளனர். கடன் தொகையை கட்டாததால் வீட்டை ஜப்தி செய்கிறோம் எனக் கூறி சயன் வீடு மற்றும் அவர் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகள் என ஏழு வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிச்சென்றார்கள். 10 நாட்களுக்குள் மொத்த தொகையையும் கட்டி விடுகிறேன் என சயன் அவகாசம் கேட்டும் அதை ஏற்றுக்கொள்ளாமல் 7 வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்து விட்டு சென்றார்கள்.
இது சர்ச்சையான நிலையில், தனியார் நிதி நிறுவனம் விளக்கம் அளித்தது, அதன்படி, கடன் பெற்ற சயன் சரிவர தவணை தொகையை கட்டாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நோட்டீஸ் வழங்கினோம். அதன் பிறகே ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பல்லடம் போலீசார் வீட்டின் உரிமையாளர் சயன் மற்றும் அவரது மனைவி கீதாவை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்படி நடத்திய விசாரணையில் சயனின் பூர்வீகம் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது தான் வீட்டின் உரிமையாளர் சயன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த சயன் சட்டவிரோதமாக 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து வருவதும், திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றிய கீதா என்பவரை திருமணம் செய்த பின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்திய குடியுரிமை பெற ரூ.15 லட்சம் செலவழித்தும் குடியுரிமை பெற முடியவில்லை என சயன் போலீசாரிட கூறினாராம். அதனை தொடர்ந்து பல்லடம் போலீசார் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் சயனை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications