கழுத்தை நெரிக்கும் அமெரிக்க வரி.. திருப்பூர் தொழிற்சாலைகள் எடுத்த ஸ்மார்ட் முடிவு.. என்ன நடக்கும்?
திருப்பூர்: அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதங்கள் தீவிரமாகி உள்ளன. அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் 50% வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், இந்தியாவின் பின்னலாடை தலைநகரான திருப்பூரின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் நோக்கில், திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் தற்போது அமெரிக்காவிற்கு பின்னலாடைகளை தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யும் சில உற்பத்திப் பிரிவுகள் தங்களது உற்பத்தியையே நிறுத்திவிட்டன.

டிரம்ப் வரி விதிப்பு - திருப்பூர் பாதிப்பு
அமெரிக்க அதிபர் கொண்டு வந்து உள்ள 50% கூடுதல் வரி விதிப்பால், திருப்பூர், நொய்டா, சூரத் போன்ற தொழில்துறை மையங்களில் உள்ள ஏற்றுமதி சார்ந்த ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் போட்டியாளர்களிடம் இந்திய ஜவுளி அலகுகள் தங்கள் இடத்தை இழந்து வருவதாக FIEO அமைப்பு தெரிவித்து உள்ளது. சீனா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் உள்ளிட்ட இந்திய உற்பத்தி அலகுகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.
அமெரிக்காவின் புதிய 50% வர்த்தக வரி விதிப்பு, இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான இந்திய ஏற்றுமதிகள் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படவுள்ளன. அனைத்துத் துறைகளும் சமமாகப் பாதிக்கப்படாவிட்டாலும், குறிப்பிட்ட சில துறைகள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் ஏற்றுமதி
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஏற்றுமதியாளர்கள் சலுகை அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) தலைவர் கே.எம். சுப்பிரமணியன் இதுகுறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், "எங்களுக்கு இதுவரை எந்த சாதகமான தகவலும் கிடைக்கவில்லை. எனவே, ஏற்றுமதியாளர்கள் தற்போது முடிக்கப்பட்ட ஆர்டர்களை அமெரிக்காவிற்கு தள்ளுபடி விலையில் அனுப்பும் நிலையில் உள்ளனர்."
"எங்கள் பொருட்களை அமெரிக்காவில் வாங்கும் நிறுவனங்களுக்கு 2% முதல் 5% வரை தள்ளுபடி வழங்கி ஆர்டர்களை அனுப்புகிறோம். தொடர்ந்து அவர்கள் எங்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்று இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். புதிய ஆர்டர்களுக்கு அதிக இறக்குமதி வரிகளை எதிர்கொள்ள அமெரிக்க வாங்குபவர்கள் தயாராக இல்லாததால், அமெரிக்காவிலிருந்து வரும் நாட்களில் வரும் ஆர்டர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளை விரைவில் சந்திக்க உள்ளோம்," என்று அவர் கூறினார்.
வரி உயர்வு காரணமாக ஏற்கனவே செய்யப்பட்ட ஆர்டர்களை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க வாங்குபவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் விளைவாக, ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி மதிப்புள்ள பின்னலாடைகள் திருப்பூரில் தேங்கிக் கிடக்கின்றன. இவை அமெரிக்க நிறுவனங்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை என்பதால், அவற்றை வேறு நிறுவனங்களுக்கோ அல்லது வாங்குபவர்களுக்கோ விற்க முடியாது. நீண்ட காலத்திற்கு இவற்றை வைத்திருக்கவும் முடியாது. எனவே, இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு, ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க வாங்குபவர்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பாதிக்கும் திருப்பூர் தொழிற்சாலைகள்
இதுதவிர, அமெரிக்காவில் வாங்குபவர்களின் கோரிக்கையின் பேரில் ஏற்றுமதியாளர்கள் ஆர்டர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால் பல உற்பத்திப் பிரிவுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள சுமார் 30% நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 80-100% அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றன. இவை கடுமையாக பாதிக்கப்படும்.
தற்போது ஏற்றுமதியாளர்கள் சமாளிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த நிலை நீடிக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும். குறிப்பாக, வங்கிக் கடன் அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு இரண்டு வருட அவகாசமும், சிறப்பு அவசரக் கடன் வசதியும் வழங்கப்பட வேண்டும்.
கடந்த நிதியாண்டில் திருப்பூரிலிருந்து ரூ.44,747 கோடி மதிப்புள்ள பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் சுமார் 35% அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications