3 சிறுவர்கள் உயிர்களில் காட்டிய அலட்சியம்..திருப்பூர் விவேகானந்தா காப்பகத்திற்கு சீல்.. அரசு அதிரடி
திருப்பூர்: ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காப்பக நிர்வாகிகளின் அலட்சியமே சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் கீதாஜீவன், விவேகானந்தா சேவாலயம் மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறுவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க 5 குழுக்கள் அமைத்து அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வேட்பாளர் ஒரே தொகுதி! கட்சிகளுக்கு கடிவாளம் போடும் தேர்தல் ஆனையம்! அரசுக்கு பறந்த பரிந்துரை!
அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
இந்நிலையில் திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், சாமிநாதன் ஆய்வு செய்தனர். சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், ஆட்சியர் வினீத், காவல் ஆணையரும் உடனிருந்தனர்.
காப்பகம் மூடல்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது. சரியான கண்காணிப்பு இல்லாதது, மெத்தனபோக்கு ஆகியவற்றால் இந்த இறப்பு ஏற்பட்டுள்ளது; எனவே இந்த காப்பகம் மூடப்படுகிறது.
அலட்சியமே காரணம்
ஆதரவற்ற குழந்தைகளின் நிலை கண்டு முதல்வர் ஸ்டாலின் வருத்தமடைந்தார். இரவு நேரத்தில் காப்பாளர் யாரும் இல்லை. திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் காப்பகம் பாதுகாப்பற்ற இடமாக உள்ளது. சிறுவர்களை காப்பகத்தில் சரியாக கண்காணிக்கவில்லை. காப்பக நிர்வாக செயல்பாடுகளில் அலட்சியமாக இருந்த காப்பக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதரவற்ற குழந்தைகள்
இங்கு தங்கியிருந்த குழந்தைகள் அனைவருமே பெற்றோர் இல்லாதவர்கள். யாரை நம்பி இங்கு தங்கியிருந்தார்களோ அவர்களே சரியாக கவனிக்காமல் விட்டு விட்டனர். இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். வெளியில் இருந்து சமைத்த உணவை வாங்கித்தரக்கூடாது என்பது விதி. அதையும் மீறி வெளியில் இருந்து சமைத்த உணவை வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் குற்றம் சாட்டினார்.
அரசு இல்லத்தில் தங்க வைப்பு
விவேகானந்த சேவாலய காப்பகத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற சிறுவர்கள் ஈரோட்டில் உள்ள இல்லங்களில் தங்க வைக்கப்படுவார்கள். திமுக சார்பாக உயிரிழந்த 3 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்,பாதிக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியை வழங்கினர் எனவும் கூறினார்.