ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம்
திருப்பூர்: திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரை நடக்க இருந்த தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோ கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு, கோவை திரும்பினார் விஜய். பெருமாநல்லூரில் பிரசாரத்தை முடிக்கும்போதே காலதாமதம் ஆனதால் ரத்து செய்துள்ளார். பல மணி நேரமாக வெயிலில் காத்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் திருப்பூரில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் விஜய். அப்போது பேசிய விஜய், தவெகவின் முழு தேர்தல் அறிக்கை ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகும் என்றார். மேலும் நெசவாளர்களுக்கு பத்து லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என்றார். அதோடு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர தவெக அரசு பரிசீலிக்கும். காவலர்களுக்கு அடிப்படை மாத ஊதியம் 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றார் விஜய்.
விஜய் திருப்பூர் பரப்புரையில் இதுபோன்ற வாக்குறுதிகளை வழங்கினார். குறிப்பாக நான் பொய் வாக்குறுதிகள் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டார் விஜய். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் என்னை 100% நம்பலாம், உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே நான் வந்திருக்கின்றேன் எனவும் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, பெருமாநல்லூரில் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்தாமல் கோவைக்கு திரும்பினார் விஜய். திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரை நடக்க இருந்த தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோ கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு, கோவை திரும்பினார் விஜய். பெருமாநல்லூரில் பிரசாரத்தை முடிக்கும்போதே காலதாமதம் ஆனதால் ரத்து செய்துள்ளார்.
இதனால், பல மணி நேரமாக வெயிலில் காத்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொளுத்தும் வெயிலில் விஜய்யைப் பார்க்க ஏராளமான மக்கள் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இன்று காலை முதல் காத்திருந்தனர். அப்பகுதியில் இன்று மதியம் கடும் வெயில் காரணமாக 10 பேர் வரை மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென ரத்து செய்யப்பட்டு வருவது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று திருப்பூர் பெருமாநல்லூரிலும் விஜய்யின் ரோடு ஷோ ரத்தாகியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசும் இடத்திற்கு செல்லாததால் பேசாமல் திரும்பினார். கடலூரில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications