2020-ல் போக்குவரத்து காவல்துறை அபராதம் 2 மடங்காக அதிகரிப்பு: ஆர்டிஐ தகவல்
தமிழகம் மற்றும் சென்னையில் இதுவரை இருந்ததை விட கடந்த ஆண்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை அபராதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கப்பட்டது ஆர்டிஐ கேள்வியில் தகவலாக வெளிவந்துள்ளது.
விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு
வாகன பெருக்கம்- போக்குவரத்து நெரிசல்
சென்னையில் மக்கள் தொகைக்கு இணையாக இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. இதே போல் மாநிலம் முழுவதும் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. கடந்த ஆண்டு பொதுமுடக்கம் காரணமாக் வாகன போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்ட நிலையிலும் வாகனங்களுக்கான அபராத தொகை 2019 ஆம் ஆண்டைவிட இரு மடங்கு வசூலிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு போக்குவரத்து போலீஸாருக்கு இரட்டை மடங்கு வருமானம்
போக்குவரத்து காவல்துறை அபராதம் கடந்த 5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலரால் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில காவல்துறை தலைமையகம் அளித்த பதிலில், சென்னையில் 2019 ஆம் ஆண்டில் ரூ.33.39 கோடி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.66.31 கோடியை சென்னை போலீஸார் வசூலித்துள்ளனர்.
அபராத வசூல் விவரம் ஆர்டிஐயில் காவல்துறை தகவல்
கடந்த ஐந்தாண்டுகளில் அபராதம் வசூலிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூல் செய்யப்பட்ட தொகை, ரூ.24.13 கோடியாக இருந்தது, இது, 2017 ஆம் ஆண்டில், 25.58 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது, 2018 ஆம் ஆண்டில், 27.83 கோடி ரூபாயாகவும், 2019 ஆம் ஆண்டில், 33.39 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத வசூல், கடந்த ஆண்டில் வசூலான தொகையைவிட 2020 ஆம் ஆண்டில் 31.66 சதவீதம் அதாவது ரூ.52.51 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தில் போக்குவரத்து போலீஸார் விதி மீறலுக்காக விதித்த அபராத வசூல் ரூ.165.81 கோடியாக இருந்த நிலையில், அந்தத் தொகை 2020 ஆம் ஆண்டில் 218.32 கோடியாக அதிகரித்துள்ளது.
5 ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டில் அதிகப்பட்ச அபராதம் வசூல்
தமிழகத்தில், 2016 ஆம் ஆண்டில் இருந்து போக்குவரத்து அபராத வசூல் அதிகரித்து வருகிறது - 2018 ஆம் ஆண்டினைத் தவிர, 2016 ஆம் ஆண்டில் ரூ.101.43 கோடியாக இருந்தது, 2017 ஆம் ஆண்டில் ரூ.155.60 கோடியாக 50 சதவீதம் உயர்ந்தது 2018 ஆம் ஆண்டில் ரூ.118.18 கோடியாக குறைந்துள்ளது. , ஆனால் 2019 இல் மீண்டும் 165.81 கோடியாக உயர்ந்துள்ளது என்று மாநில காவல்துறை தலைமையகம் ஆர்டிஐ பதிலில் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் முடக்கப்பட்ட போதும் அபராதம் அதிகரிப்பு?
கொரோனா காலத்தில் போக்குவரத்து முடக்கப்பட்டாலும் அபராத வசூல் மட்டும் அதிகரித்துள்ளது. இதற்கு 3 காரணங்கள் கூறப்படுகிறது. போக்குவரத்து முடக்கம், நடமாட்டம் குறைந்திருந்தாலும், ஊரடங்கு விதிமீறலை கடுமையாக பிடித்து போலீஸார் அபராதம் விதித்தனர். இரண்டாவது போக்குவரத்து விதிமீறல்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது, மூன்றாவது காரணம் அனைத்து அபராத வசூலும் சலான் மூலம் அல்லாமல் ஆன்லைன் மூலம் வசூலிக்கப்பட்டதால் இடையில் யார்கைக்கும் போகாமல் அரசுக்கு வந்தது என காவல்துறை தரப்பில் தகவலாக உள்ளது.