NIA ரெய்டுக்கு பின் திருச்சி கூட்டத்தில் ‘தலைவர்’ படம் மிஸ்ஸிங்.. பேசும் போது திடீரென தேடிய சீமான்!
திருச்சி: தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA, என்.ஐ.ஏ.) சோதனைகளுக்குப் பின்னர் திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் வழக்கமாக இடம் பெறும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இடம் பெறவில்லை. தமது பேச்சின் போது பிரபாகரன் பெயரை குறிப்பிட பேனரில் அவர் படத்தை சீமான் தேடிய சுவராசியமும் நிகழ்ந்தது.
நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் பலரது வீடுகளில் அண்மையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

நாம் தமிழர் கட்சியின் வெளிநாட்டு நிதி உதவி தொடர்பாகவே சோதனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. பின்னர் யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்க முயற்சித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களுடனான தொடர்பு, தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சிப்பது தொடர்பான வழக்கில் சிக்கியவர்களுடனான தொடர்பு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் "சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட" வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சியில் கடந்த 2-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ,பொதுக் கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்களது வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனைகள் நடைபெற்றதை கிண்டலடித்து பேசியிருந்தனர்.

இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சீமானும் என்.ஐ.ஏ. சோதனைகளை விமர்சித்து பேசினார். அப்போது வெடிகுண்டு தயாரிக்க டிசைன் செய்து கொடுத்த ஹூமாயூன், மணிசெந்தில் ஆகியோர் கீழே இருக்கிறார்கள் என கிண்டலாகவும் கூறினார். இதனை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த ஹூமாயூன் மணி செந்தில் ஆகியோர் ரசித்து கேட்டனர்.
மேலும் இப்பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், பிரபாகரன் பெயரை குறிப்பிடுவதற்காக தமக்கு பின்னால் இருந்த பேனரில் வழக்கம் போல இடம் பெறக் கூடிய பிரபாகரன் படத்தை தேடினார். ஆனால் இம்முறை திருச்சி பொதுக் கூட்ட பேனரில் பிரபாகரன் படம் இடம் பெறவில்லை. "எங்கடா அவரு படத்தை காணலை.. இன்னைக்கு பார்த்து அவர் படத்தை போடக் காணோம்" என்று சொல்லிவிட்டு பேச்சை தொடர்ந்தார் சீமான். என்.ஐ.ஏ. சோதனைகளைத் தொடர்ந்தே பிரபாகரன் படம் இடம் பெறவில்லையா? என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டது.
அதே நேரத்தில் நேற்று திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு உள்ளரங்க கூட்டத்தில் வழக்கம் போல பிரபாகரன் படம் இடம் பெற்றிருந்தது. இதிலும் சீமான் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications