குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க முடியும்.. டி.ராஜா சொல்லும் ஐடியா
திருச்சி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றியை தடுக்க முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 தமிழரை விடுதலை செய்யும் வரை லாங் லீவில் வெளியே விடுங்க.. சீமான் அப்பீல்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்கள் என்று கேள்வி அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்தநிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, குடியரசுத் தலைவர் தேர்தல், நுபுர் ஷர்மா சர்ச்சை, பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பதிலளித்தார்.
நுபுர் ஷர்மா சர்ச்சை
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேச்சு குறித்து டி.ராஜா கூறுகையில், தற்போது இந்திய அரசியல் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்துகொண்டு, நாட்டின் அரசியலமைப்பை திருத்த முயற்சிக்கின்றன.
பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு நாடுகளில் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தியா குடியரசு நாடாக தொடர்ந்து நீடிக்க மதச்சார்பற்ற அனைத்து சக்திகளும் பாஜகவுக்கு எதிரான சேர வேண்டும் என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த் டி.ராஜா, குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. அரசியல் சாசனத்தை உயர்த்தி பிடிக்கக்கூடிய, ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய, இந்தியாவின் ஒற்றுமையை காப்பாற்றுகிற நேர்மையானவரே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுவதாக தெரிவித்தார்.
பாஜக வெற்றி கேள்விக்குறியே
நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டப்பேரவையிலும் தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வேட்பாளரை வெற்றிபெற வைக்க முடியும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் மாநிலக் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டால், பாஜக வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என்று டி.ராஜா தெரிவித்தார்.
வேலையில்லா திண்டாட்டம்
அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தது பற்றி டி.ராஜா கூறுகையில், இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் நிலை குலைந்திருப்பதை காட்டுவதாக தெரிவித்தார்.