திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம்... வாக்குகளை வளைக்க அதிமுக தீவிரம்
திருச்சி: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதன் மூலம் மத்திய மாவட்டங்களில் வலிமையான வாக்கு வங்கியை கொண்ட முத்தரையர் சமுதாயத்தினரின் ஆதரவை அதிமுகவுக்கு கொண்டு வர அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் இப்போதே அதை மனதில் வைத்து காரியங்களை ஆற்றத்தொடங்கியுள்ளது அதிமுக தலைமை.

ஒரு கோடி மதிப்பு
முத்தரையர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்துக்கான அடிக்கல்லை முதலமைச்சர் இன்று நாட்டியுள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம அவர் இதனை தொடங்கி வைத்தார். ரூ.1 கோடி திட்ட மதிப்பில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இந்த மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதேபோல் திருச்சியில் தியாகராஜர் பாகவதருக்கும் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகளை முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

5 மாதங்களில் பணிகள்
திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி அறிவிப்பு வெளியிட்ட 5 மாதங்களில் அதற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். இதற்காக முத்தரையர் சமுதாய பிரமுகர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனிடையே தற்போது கொரோனா தாக்கம் உள்ளதால் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் திட்டத்தை தள்ளிவைத்துள்ளனர்.

வாக்கு வங்கி
மத்திய மண்டலத்தை பொறுத்தவரை முத்தரையர் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ளன. பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய வகையில் முத்தரையர் சமுதாய வாக்குகள் இருக்கின்றன. இப்படி பல்வேறு காரணங்களை கூட்டிக் கழித்து பார்த்தே மணிமண்டபம் அரசியலை கையில் எடுத்திருக்கிறது அதிமுக தலைமை. இதன் மூலம் மத்திய மண்டலத்தில் முத்தரையர் சமுதாய வாக்குகளை முழுமையாக வளைக்க லோக்கல் அதிமுகவினருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கை
இதனிடையே திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அச்சமுதாய பிரமுகர்கள், தலைநகர் சென்னையிலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications