நடப்பது என்ன?.. கோவில், கோவிலாக செல்லும் அரசியல் தலைவர்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சுவாமி தரிசனம் செய்தார். தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவும் உடன் வந்திருந்தார்
மன்னார்குடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயில் வந்த தேவ கவுடாவை, கோயில் தலைமை பட்டரான சுந்தர் பட்டர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தேவ கவுடா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
சுமார் 1 மணி நேரம் கோயிலில் இருந்த தேவ கவுடா மாலை 6.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பெ.கி. தியாகராஜன், ஹேமநாதன், கே.சி. ஆறுமுகம் உள்ளிட்டோர் தரிசனத்தின் போது உடனிருந்தனர். முன்னாள் பிரதமரின் வருகையையொட்டி, திருக்கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று பிரதமர் மோடி தரிசனம் செய்தார். இதனை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். இந்தநிலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். இதே போல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications